தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் வார்டு மறுவரையறை காரணமாக நடத்தப்படாமல் இருந்தது இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும்படை அலுவலரும், தனி தாசில்தாருமான ராஜலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் காலை சங்கராபுரம் அருகே மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்த போது, அதில் கொலுசு, காப்பு, சங்கிலி உள்பட 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தன. மேலும் 3.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்களும் 57ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. 




இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், சங்கராபுரத்தை சேர்ந்த சரவணன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை எடுத்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்நாதன், இளநிலை உதவியாளர் ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.


இதேபோல், ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் பறக்கும்படை அலுவலரும், தனி வட்டாட்சியருமான ராஜலட்சுமி, போலீஸ் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஏட்டு குமரன் ஆகியோரை கொண்ட குழுவினர் காலை சங்கராபுரம் அருகே குளத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழி மறித்து சோதனை செய்தபோது அதில் 58 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அரியலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ரெத்தினமாலாவிடம் ஒப்படைத்தனர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு உடன் இருந்தார்.