ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனப் பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்களைப் பார்த்து ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாகப் பலர் பணத்தை இழந்து பெரும் கடனாளியாகி தற்கொலைக்கும் தள்ளப்படுகின்றனர். சமீப நாள்களாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அதனால் பல மாநில அரசுகள் அதனைத் தடைசெய்ய மசோதா நிறைவேற்றிவருகின்றன. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய சட்டம் இயற்றப்பட்டதால் பலரும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்த நிலையில் இருக்கிறார்கள்.


சென்னை கோயம்பேடு அடுத்த முல்லைத் தெரு சீமாத்தமன் நகரைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கோயம்பேடு சின்மயா நகரில் பிரௌசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் உறங்க சென்ற தினேஷ், இன்று அதிகாலை வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த மனைவி, அறையில் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கதறி அழ ஆரம்பித்துள்ளார்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு காவல்நிலைய போலீசார், இறந்தவர் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், இறந்த தினேஷ் அறையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இறப்பதற்கு முன்பு அவர் உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடித்ததில் தான் பலரிடமிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரையில் பணம் கடனாக வாங்கியதாகவும், அதை வேறு நபர்களுக்கு கடனாக கொடுத்ததாகவும், கடனாக கொடுத்த பணம் திரும்பி வரவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் யாருக்கெல்லாம் தினேஷ் பணம் கொடுத்துள்ளார் என்பதையும், யாரெல்லாம் தினேஷுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்பதையும் கடத்தில் எழுதி வைத்துவிட்டு தன் மரணத்திற்கு காரணம் யாரும் இல்லை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


அதனைதொடர்ந்து போலீசார் தினேஷின் மனைவியிடம் விசாரணை செய்தனர். அதில் ஆன்லைன் ரம்பி விளையாடும் பழக்கமுடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பெற்ற கடனை திருப்பி தர முடியாமல் தினேஷ் தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து தினேஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதனை சைபர் கிரைம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .