காஞ்சிபுரம் மாவட்டம்  மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் எட்டு கொலை வழக்குகள் அடக்கமாகும்.

 


எல்லம்மாள் உடன் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்


 


பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து மதுரமங்கலத்தைச் சேர்ந்த ரூபாவதி என்பவருக்கு சொந்தமான காலிமனை பட்டாவை படப்பை குணா, சென்னை ஆயுதப் பிரிவு காவல் துறையில் பணிபுரிந்து வரும், அப்பு என்கிற சதீஷ்குமார், நாகராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 நபர்கள் மிரட்டி வாங்கி சென்றதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி படப்பை குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா தற்போது வரை தொடர்ச்சியாக தலைமறைவாகி இருக்கிறார். மேலும் தலைமறைவாக இருக்கும் சமயத்திலும் பல்வேறு தொழிற்சாலைகள் மிரட்டுவது தொடர்ச்சியாக கட்டப்பஞ்சாயத்து ஈடுபடுவது என தொடர்ச்சியாக ரவுடியிசம் செய்து வந்தார்.

 


 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானது. இதனால் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எடிஎஸ்பியாக உள்ள வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த சில வாரமாக மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளை கைது செய்து, பல்வேறு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

 


 

தொடர்ச்சியாக படப்பை குணா தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் படைப்பை குணாவின் மனைவியும் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர் எல்லம்மாள் என்பவரை நேற்று அதிகாலை கூடுதல் எஸ்பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து சுங்குவார்சத்திரம் காவல்  நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். எல்லம்மாள் உட்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த 6 பேரிடமும் படப்பை குணா எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்பது உள்ளிட்ட விவரங்களுக்காக போலீசார் விசாரணை நடத்தி பின்னர் விடுவித்ததாக கூறப்படுகிறது.