காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் காஞ்சிபுரம் வருகை தந்தார். காந்தி ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசப்பிதா காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் பொருட்களை வாங்கி பயன்படுத்த ஊக்கப்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் தேரடி  பகுதியில் உள்ள காதி அங்காடியில்  கட்சி நிர்வாகிகளுடன் சென்று விற்பனை செய்யும் பொருட்களை பார்வையிட்டு பொதுமக்களை வாங்கிட ஊக்கப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் காந்திஜியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



 

மேலும் தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென தெரிவித்து வந்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்தபின்பு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனால் இரட்டை நிலைப்பாட்டை திமுக விட்டுவிட்டு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் . நீலகிரி மாவட்டத்தில் புலியை சுட்டுக் கொல்லும் விஷயத்தில், புலிகளுடைய எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது, அதை  ஒற்றை புலி என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த விஷயமாக கருதவேண்டும். தமிழக வனத்துறை மிக கவனமாக செயல்பட்டு புலியை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்காக உள்ளூர், மக்கள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
  வானதி சீனிவாசன் கேட்டு கொண்டார்.

 




ஆட்கொல்லியாக மாறுவதற்கான காரணங்கள்


புலி அவ்வளவு எளிதில் ஆட்கொல்லியாக மாறி விடாது என சூழலியல் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். புலிகள் ஆட்கொல்லியாக மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக புலிகள் வேட்டையாடும் தன்மை குறையும்போது, கிராமங்களில் உள்ள வளர்ப்பு பிராணிகளை தாக்கி உண்ணத் துவங்கும். அத்தகைய சமயங்களில் எதேச்சையாக மனிதர்களை புலி வேட்டையாடி உண்டால், ஆட்கொல்லியாக மாற வாய்ப்புள்ளது. ஏனெனில் மனிதர்களை புலிகள் வேட்டையாடுவது மிகவும் எளிதானது. மனித வேட்டைக்கு பழகிய புலிகள் ஆட்கொல்லியாக மாறும் என்கின்றனர், சூழலியல் செயற்பாட்டாளர்கள்.


இது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கூறுகையில், “கூடலூர் புலியை சுட்டுக்கொல்ல முடிவு எடுத்திருப்பது மிகவும் வருத்தமானது. மக்கள் ஒத்துழைப்பு இன்றி புலிகளை காப்பாற்ற முடியாது. ‘மேன் ஈட்டர்’களை காடுகளில் வைத்திருப்பது பிரச்சனைதான். இதனை சுட்டுக் கொல்வதை தவிர வேறு வழியில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. புலி, சிறுத்தை மனிதர்களை கண்டால் விலகிச்செல்லும் தன்மை கொண்டது. அவ்வளவு சீக்கிரம் மனிதர்களை வேட்டையாடாது.


புலிகள் ஆட்கொல்லியாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது முதிர்வு, உடல் ரீதியாக பாதிப்பு, நோய் தொற்று, இயலாமை, கண் பார்வை குறைவு, இளவயதில் அடிபடுதல், எல்லைகளுக்காவோ மற்ற விலங்குகளுடனோ சண்டையிட்டு காயமடைதல் உள்ளிட்ட காரணங்களால் வேட்டைத் திறன் குறையும். இரையை தேடும் வலிமை இழக்கும். அத்தகைய நிலையில் கிராமங்களில் உள்ள கால்நடை தாக்கி உண்ணும். எதேச்சையாக மனிதனை தாக்க நேரிடும். புலிகளுக்கு மனிதனை வேட்டையாடுவது தான் மிகவும் எளிமையானது. தாய்ப்புலி ஆட்கொல்லியாக இருந்தால், குட்டிகளும் ஆட்கொல்லியாக மாற வாய்ப்புள்ளது. பூங்காக்களிலும் ஆட்கொல்லி புலிகளை பராமரிப்பதில் சிக்கல் உள்ளது. சிலர் புலியை சுட்டுக்கொல்லக் கூடாது என உணர்ச்சிப்பூர்வமாக சொன்னாலும், வேறு வழியில்லை என்பதே எதார்த்தம்.