தமிழக அரசு உத்தரவுபடி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 67 ஆயிரத்து 322 பேருக்கு முதல் தவணையும், 2 லட்சத்து 61 ஆயிரத்து 256 பேருக்கு 2 வது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் 19 லட்சத்து 16 ஆயிரத்து 412 பேர் உள்ளனர்.



செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 906 இடங்களில் நடைபெறும் மாபெரும் கொரோனா தொற்று தடுப்பூசி முகாமில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 






இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  இதுவரை கொரோனா தொற்று தடுப்பூசி முதல் மற்றும் 2 ஆவது தவணை செலுத்தி கொள்ளாதவர்கள். உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தொற்றில் இருந்து நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்து கொள்ள கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எந்தவித பயமும் மக்கள் மத்தியில் இருக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறோம். கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

இன்று 2 மணி நிலவரப்படி

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு மணி நிலவரப்படி 45000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் மாலை வேளையில் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்காக பொதுமக்கள் அதிகம் வருவார்கள் எதிர்பார்ப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெற்றுவரும் மாபெரும் சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி முகாம்  பணிகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட  கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம் களுக்கான கண்காணிப்பு அலுவலர் பொன்னையா  தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ராகுல்நாத்  முன்னிலையில்  அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.