சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை பொதுவாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. 


அந்த வகையில், இன்று (ஜூலை.06) வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 1068.50 ரூபாயாக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.


இந்நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும் என்றும், உடனடியாக இந்த விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


அன்புமணி ராமதாஸ் ட்வீட்
 


முன்னதாக இது குறித்து ட்வீட் செய்துள்ள அன்புமணி ராமதாஸ், “சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை 1068 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு விலை ஆயிரத்தைக் கடந்த பிறகும் மாதம் தவறாமல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல.


 சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில் 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 710 ரூபாயாக இருந்த உருளை விலை இதுவரை 358 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 50.44 விழுக்காடு உயர்வு ஆகும். இவ்வளவு விலை உயர்வை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.


 






வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு


மேலும், உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை உயராததை சுட்டிக் காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், ”இந்தியாவில் இன்று கூட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8.50 குறைக்கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சியாகும். உலக சந்தையில் விலை குறையும் போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன்?


உஜ்வாலா வகை இணைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு மானியத்தை அனைவருக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், விலை உயர்த்தப்படுவது மக்களுக்கு நன்மை பயக்காது. விலை உயர்வை ரத்து செய்து விட்டு, மக்களுக்கு அரசு மானியம் வழங்க  வேண்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.


கடந்த மே 7ஆம் தேதி முதன்முறையாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ஆயிரத்தைக் கடந்தது. அப்போது 1015 ரூபாயை எட்டிய சிலிண்டர் விலை மே 19ஆம் தேதி 1018.50 ரூபாயாக உயிர்ந்தது குறிப்பிடத்தக்கது.