Kilambakkam Bus Terminal: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


கிளாம்பாக்கம் பேருந்து முனையம்:


சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்க உள்ளார். இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரமாண்ட பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில், பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்:



  • 6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

  • சென்னைமற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.

  • 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன

  • கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன.

  • கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும். 

  • 2 அடித்தளங்களில் 340 கார்கள், 2,800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தமுடியும்

  • இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன.

  • தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

  • முக்கியமாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது

  • ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

  • விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  • 2025 இல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

  • ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது.


இந்த பேருந்து முனையத்தின் மூலம் தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் காத்திருப்பு நேரம், போக்குவரத்து நெரிசலில் சிக்குவது போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தொலைநோக்கு பார்வையுடனும் இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. SETC மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆம்னிபஸ்களின் செயல்பாடுகள் உடனடி நடைமுறையுடன் தொடங்கும், அதே நேரத்தில் TNSTC மற்றும் PRTC ஆகியவை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.