தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும்  உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்களை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி,  முதியோர் இல்லங்களை ஆய்வு செய்வது, பதவி செய்யப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்பது, பதிவு செய்வது கட்டாயம் என தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

 

அந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என கிருஷ்ணமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதேபோல அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணையை அமல்படுத்தக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு,  அரசாணை செல்லும் என கூறி, அதில் தலையிட மறுத்து, அரசாணையை எதிர்த்த வழக்குகளையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும்,  முடித்துவைத்தது.

 

மேலும் முதியோர் இல்லங்களை முறைபடுத்தி கண்காணிப்பது தொடர்பாக அரசு பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை நீதிபதிகள் வகுத்துள்ளனர்.அனைத்து முதியோர் இல்லங்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசாணை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.முதியோர் இல்லங்களில் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பின்னரும் நிவர்த்தி செய்யாத முதியோர் இல்லங்களின் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

முதியோர் இல்லங்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் நிர்வாகிகளின் விவரங்களை பராமரிக்க வேண்டும்.மூத்த குடிமக்கள் புகார் அளிக்க ஏதுவாக தனிப்பிரிவை தொடங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யப்படாதவை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த அரசாணை அடிப்படையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.