சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு  தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 


 

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதால்,  சொத்துக்களை தங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட கோரி சிவாஜி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த வழக்கில்,  சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால்,  பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரி,  சாந்தி, மற்றும் ராஜ்வி சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யபட்டன. இந்த கூடுதல் மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். 

 

 அனைத்து சொத்துக்களிலும் தங்களுக்கு சமபங்கு உள்ளதாகவும், சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்‍ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகோதரர்கள்  ராம்குமார், பிரபு ஈடுபடுவதாகவும் பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் வரை இது தொடர்பனா சொத்துக்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது.

 

நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில், சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

 

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர், சதீஸ் பாரசுரன் ஆஜராகி, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும்  2010 ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக வாதிடப்பட்டது.

 

 கூடுதல் மனுக்கள்  மீது வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில்,  இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று உத்தரவிட்டார்.

 



 
















41ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதியின்றி தவிக்கும் திருப்பணிபுரம் கிராம மக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

 



வனத்துறை எதிர்ப்பு காரணமாக 41ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிபுரம் கிராம மக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.




 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராம மக்கள் சார்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக்கோரி கடந்த 1979ம் ஆண்டு மின்சார வாரியத்திடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் குழாய் இணைப்பு வழங்கி அதன் மூலம் குடிநீர் வழங்க உத்தரவிட  வேண்டுமெனவும், வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதாகவும் கூறியுள்ளார். 

 

இந்த மனு ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது, மின்சார வாரியம் அளித்த பதிலில், மின்சார இணைப்பு அளிக்கும் வகையில் 14 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

அரசியல் சாசனப்படி, மக்களுக்கான அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை வழங்குவது அரசின் பொறுப்பு எனக் கூறிய மனித உரிமை ஆணையம்,  இதற்காக அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. 

 

மேலும், மின்சார வசதிக்கோரி 25 குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக விண்ணப்பிக்க உத்தரவிட்ட ஆணையம், குழாய் மூலம் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. 

 

அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிட கூடாதென வனத்துறைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது