சினேகா ஒரு மாடலாக இருந்து தமிழ் சினிமாவில் என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய குடும்பப்பாங்கான முகமும், இவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் என தனி ரசிகர் கூட்டமே இருந்தது. சினேகா அதிகம் கிராமத்து சாயலில் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனந்தம், பிரிவோம் சந்திப்போம், புன்னகை தேசம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் மக்கள் மத்தியில் புன்னகை அரசி என்று பெயர் பெற்றார். நடிகர் பிரசன்னாவை மணந்த இவர் அதன் பிறகு வெகு குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த, சினேகா திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.



தற்போது அதிக வட்டி தருவதாக கூறிய ஆசை வார்த்தையை நம்பி நடிகை சினேகா ரூ 26 லட்சத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக தனியார் சிமெண்ட் நிறுவன உரிமையாளர்கள் மீது நடிகை சினேகா மோசடி புகார் அளித்துள்ளார். பிரபல தமிழ் நடிகையான சினேகா, சென்னை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தரும் விதத்தில் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். 26 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதாக சினேகா தெரிவித்துள்ளார். இதனை நம்பி 25 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாகவும், 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வழங்கியதாகவும் சினேகா குறிப்பிட்டுள்ளார்.


முதலீடு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு வட்டி தொகை கேட்ட போது அதனை தர மறுத்து தன்னை மிரட்டியதாக காவல்துறையில் அளித்துள்ள புகாரில் நடிகை சினேகா தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.



2009-ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் திருமணம் நடைப்பெற்றது. 2015-ஆம் ஆண்டு இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். பின்பு அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். இதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சினேகாவிற்கு வேலைக்காரன் படம் மூலம் ரசிகர்கள் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.