காஞ்சிபுரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலை தெருவில்  அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டை 8 பேர் கொண்ட  கும்பல் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் 4 பேருக்கு வெவ்வேறு பகுதியில் அருவாள் வெட்டு  இதனால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 



கம்போடியாவில் கடந்த 2017-ல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு, காஞ்சிபுரம் சில நாட்கள் ரவுடிகள் அராஜகமின்றி அமைதியாக இருந்தது. ஆனால், ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் ஸ்ரீதர் போல கோலோச்ச வேண்டும் என ஸ்ரீதரின் ஆதரவாளர்களான தனிகா மற்றும் தினேஷ் இவர்களுக்குள்  போட்டி ஏற்பட்டது. இதனால் தொடர் கொலைகள் காஞ்சிபுரத்தில் அரங்கேறி வந்தன. சம்பந்தப்பட்ட நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு, மீண்டும் காஞ்சிபுரத்தில் கொலைகள் நடைபெறாமல் இருந்து வந்தன.

 



 

இந்நிலையில் சமீப நாட்களாக காஞ்சிபுரத்தில் உள்ள தொழில் அதிபர்களையும், வசதி படைத்தோரையும், லட்சக்கணக்கில் பணம் கேட்டு, போன் மூலம்  மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மிரட்டலுக்கு ஆளான பலரும் புகார் தர மறுப்பதால், போலீசார் விழி பிதுங்குகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் சாலை தெரு பகுதியில் ஸ்ரீராம் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீராமிடம்  மறைந்த ஸ்ரீதரின் அடியாட்கள் லட்சக்கணக்கில் மாமுல் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்பட்டுகிறது. இருந்தும் ஸ்ரீராம் பணம் தராத நிலையில், ஸ்ரீதரின் ஆதரவாளரான ஜெமினி, ஜெகன் உள்ளிட்ட கும்பல் நேற்று இரவு கையில் கத்தியுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக கடையில் உள்ள பொருட்களை தாக்கி விட்டு கடையை சூறையாடினர்.



இதற்கு முன்பாக  ஸ்ரீதரின் கூட்டாளியான ஏட்டு பிரபு என்பவரின் வீட்டுக்கு சென்ற பிரபல ரவுடி தினேஷின் ஆதரவாளர்கள், ஏட்டு பிரபுவின் இரண்டு மகன்களையும் கமலேஷ், ஜனார்த்தன் ஆகியோர்களை வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த இருவரையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பிறகு சாலைத் தெருவில் உள்ள வீரலட்சுமி என்ற சூப்பர் மார்க்கெட்டின் கடையை அடித்து நொறுக்கினர். இதனை அடுத்து சிறுவாக்கம் பகுதியில் ராஜமன்னார் மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் வெட்டி விட்டு ரவுடி ஜெமினி ,ஜெகன் உள்ளிட்ட 5 நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர் .

 



மறைந்த ஸ்ரீதருக்கு பிறகு அவரைப் போலவே காஞ்சிபுரத்தில் கோலோச்ச தனிகா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் போட்டோ போட்டி போட்டு வருகிறார்கள். இந்த இரு ரவுடிகளின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக வெட்டி படுகொலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பருத்திக்குன்றம், பல்லவர்மேடு, பொய்யாக்குளம், திருக்காலிமேடு, குண்டுகுளம் போன்ற பகுதிகள் ரவுடிகளின் புகலிடமாகவும் உள்ளது. 



காவல்துறையினர் உடனடியாக  ரவுடிகள் மீது இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில்  போலீசார் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பர் என பொதுமக்களும், பாதிக்கப்பட்டோரும் எதிர்பார்த்துள்ளனர்.