வசூல் மன்னன் விஜய்

 

தமிழ்நாட்டில் முன்னணி நடிகராகவும் , அதிக ரசிகர்களுக்கு கொண்ட நடிகராகவும் விஜய் இருந்து வருகிறார். விஜய் நடிக்கும் படங்கள் அதிகளவு வசூல்களை குவிக்கும் என்ற நம்பிக்கையில், தயாரிப்பாளர்களும் பெரும் பொருட்செல்லில், விஜய் படங்களை தயாரிக்க முன்வருகின்றனர் . 

 

நடிகர்கள் - அரசியல்

 

தமிழ்நாட்டில் கதாநாயகராக நடிக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும், தனி ரசிகர் மன்றம் இருக்கிறது. ரசிகர் மன்றம் மூலம் நடிகர்கள் தங்கள் படங்களை பிரபலப்படுத்துவது மட்டுமில்லாமல், நற்பணிகளும் செய்து வருகின்றனர். சில சமயங்களில் பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினால், இந்த ரசிகர் மன்றங்களை அரசியல் இயக்கமாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.

 

தேர்தல் வெற்றி

 

அந்த வகையில், நடிகர் விஜய் , " விஜய் மக்கள் இயக்கம் " என்ற பெயரில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார் . விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் , புஸ்சி ஆனந்த் இருந்து வருகிறார். ஒருங்கிணைப்பு கூட்டங்கள் உள்ளிட்டவற்றை, அவர் ஏற்பாடு செய்து வருகிறார். இந்நிலையில்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர் மன்றத் தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் , விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை, உள்ளாட்சி பிரதிநிதி தேர்தலில் போட்டியிட, நடிகர் விஜய் அனுமதி அளித்தார்.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றனர்.

 

அரசியல் பரபரப்பு

வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் நேரடியாக அழைத்து, பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளப்பி இருந்தது. தொடர்ந்து, விஜய்  மக்கள் இயக்கத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

ரசிகர்களை சந்தித்த விஜய்

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்டிருக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விஜய் மக்கள் இயக்க தொண்டர்களை சந்தித்த விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதேபோல் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்க குருதியகம், உள்ளிட்ட செயலிகளை வெளியிட்டு மக்கள் பணியில் ஈடுபடுமாறு தங்கள் ரசிகர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். 

 

புதிய அறிவிப்பு

 

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்று அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் நமது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள உறுதி செய்து அதற்கு தேவையான தகுந்த இடத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

தயார் நிலையில் இருங்கள்

 

இத்துடன் அனுப்பிய படிவத்தினை தாங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்டம், அணி, நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு படிவத்தினை அளித்து பூர்த்தி செய்து அனைத்தையும் 15 நாட்களுக்குள் தயார் நிலையில் வைத்திருக்கவும். தங்கள் மாவட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில் நான் கலந்து கொள்ளும்போது என்னிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி தளபதியின் அனுமதி பெற்று விரைவில் அறிவிக்கப்படும். ஆகவே அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . இந்த தகவல்களை குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அம்பேத்கர் சிலைக்கு மாலை 

 

அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல்  அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.