ஆண்டுதோறும் இந்து அமைப்பினர் சார்பில் நடைபெற்று வந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில் மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு நடத்திய, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் இருந்து வந்தது.

 


 

இதனிடையே, கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வீட்டில் இருந்தே விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் எனக் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி தடை குறித்து விளக்கம் அளித்துள்ள, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொது இடங்களில் விநாயகர் வைத்து வழிபடும் சமயத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி வைக்க அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்



 

இந்நிலையில் காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் அருகே கடந்த 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விற்கு அனுமதி தர வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் அருகே பூஜை பொருள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்த பூபதி என்பவர், அத்தி வரதர் சுவாமி படத்திற்கு செருப்பு அணிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக, இந்து முன்னணியினர் அவரது கடையை அடித்து உடைத்தனர்.



 

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இருதரப்பினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த ஏழு நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் அருகே, இன்று சென்னையைச் சேர்ந்த நர்மதா நந்தகுமார் என்ற பெண் அத்திவரதர் படத்திற்கு செருப்பு அணிவதை கண்டித்து,  பெரியார், மணியம்மை, திராவிட கழகத் தலைவர் வீரமணி ஆகியோரின் படத்திற்கு தாலி அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பெண்ணொருவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



 

இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி போலீசார் நர்மதா நந்தகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களே உள்ள நிலையில், பெண் ஒருவர் விநாயகர் கோவில் முன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

 

வரும் 13ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X