அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 5.19 கோடி புத்தகங்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு இந்த பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு


தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 


இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.


மே 14 முதல் கோடை விடுமுறை


மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.


இதற்கிடையே இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று (மே 25) நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். 




ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு


அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ’’1-10ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்’’ என்று அறிவித்தார். கொரோனா கால அட்டவணையைப் போல அல்லாமல், வழக்கமான கல்வி ஆண்டாக இந்த ஆண்டு செயல்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.


அரசுப் பள்ளிகளுக்கு 3.35 கோடி புத்தகங்கள்


இந்த சூழலில் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க, 3,35,63,000 புத்தகங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


அதேபோல தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு 1,83,85,000 புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில், 5.19 கோடி (5,19,48,000) புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண