பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல்,இசை, உடற்கல்வி, கட்டிட கலை, தோட்டக்கலை, வாழ்வியல்திறன், ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும், இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 

Continues below advertisement

ஊதியம் இல்லாத மே மாதம் 

கடந்த பதிமூன்று ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 13 ஆண்டுகள் முடிந்த பின்னும் கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.

Continues below advertisement

தொடர் கோரிக்கை 

இந்நிலையில் திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதாக 2016, 2019, 2021 ஆகிய தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அறவழியில் போராடி வந்தனர். மேலும் தற்போது நடந்து முடிந்த திமுக ஆட்சியில் கடைசி முழு பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் அதில் தங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால், கல்வி மானிய கோரிக்கைலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினோ, கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை.

போராட்டத்தை கையில் எடுத்த ஆசிரியர்கள் 

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தை கைவிட்டு, அரசு சலுகைகள் கிடைக்க காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய இன்னும் ஒரு 300 கோடி போதும். இதற்கு முதல்வர் அரசு கொள்கை முடிவு எடுத்தால் போதும். தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 181 வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 14 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை கைவிட்டு, நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை எனவும், இதனை அறிவிக்கும் வரை தாங்கள் பல்வேறு கட்ட தொடர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்தி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையை நோக்கி படையெடுப்பு 

இந்நிலையில் தங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரத்தை வலியுறுத்தி திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 181 நிறைவேற்ற கோரி ஜுலை 8-ம் தேதி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மாநில தலைநகர் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கு பேற புறப்பட்டு சென்று வருகின்றனர்.

நல்ல இரவில் கைதான ஆசிரியர்கள்

இந்த சூழலில் அவர்கள் போராட்டத்தில் பங்கு பெறுவதை தடுக்கும் வகையில், மாநில முழுவதும் காவல்துறையினர் அவர்களை கண்டறிந்து பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் ரோந்து பணி மேற்கொண்டு பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து போராட்டத்தில் கலந்துக்கொள்ள புறப்பட்டு சென்ற தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் வா.முரளி, ராமதாஸ், மாரியப்பன், புருஷோத்தமன், ஜெகஜீவராம், பிரித்திவிராஜ் உள்ளிட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை சீர்காழி ரயில் நிலைத்தில் வைத்து கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் காக்க அறவழியில் போராட முயலும் ஆசிரியர்கள் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.