சென்னை எம்.கே.பி நகர் வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எம்.கே.பி நகர் போலீசார் வியாசர்பாடி வடக்கு அவென்யூ சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (28). என்பதும் அவரிடம் 300 கிராம் கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனை அடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வியாசர்பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த சுமதி (40) என்ற பெண்ணிடம் அவர் கஞ்சா வாங்கியதாக கூறினார் இதனை அடுத்து அந்தப் பெண்ணையும் கைது செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவரிடம் இருந்து சுமார் 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இருவரிடம் இருந்தும் சுமார் 500  கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 



மது அருந்த பணம் இல்லாததால் பள்ளி மாணவர்களின் சைக்கிளை திருடி விற்ற நபர் கைது

  



சென்னை வியாசர்பாடி ,  எம்.கே.பி நகர் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியரின் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எம்.கே.பி நகர் மற்றும் வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை எம்.கே.பி நகர் போலீசார் கண்காணித்து வந்தனர். அதில் ஒரு நபர் பள்ளி மாணவரின் சைக்கிளை திருடி செல்வது தெளிவாக தெரிந்தது. இதனை அடுத்து எம்.கே.பி நகர்  போலீசார் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு (44) என்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

 


 

விசாரணையில் மதுபோதைக்கு அடிமையான சுரேஷ்பாபு  பணம் இல்லாத போது  சாலையில் இருக்கும் சைக்கிள்களை திருடிக் கொண்டு போய் அருகில் உள்ள இரும்பு கடையில் போட்டு அவர்கள் தரும் பணத்தை வைத்து மது அருந்துவது இவரது வழக்கம் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து இவர் கடைக்கு எடைக்கு போட்ட சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் எம்.கே.பி நகர் மற்றும் வியாசர்பாடி பகுதியில் இருந்து திருடப்பட்ட சுமார் எட்டு சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் சுரேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.