Chennai Cybercrime: சென்னையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் சைபர் குற்றச்சாட்டுகளால் 189 கோடி ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.


அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்:


வழிப்பறி, திருட்டு சம்பவங்கள், செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது இருந்த இடத்திலிருந்தே வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கி லிருந்து மொத்த பணத்தையும் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் மயம் என்பது ஒருபுறம் பெரும் வரப்பிரசாதமாக கருதப்பட்டாலும், அது பெரும் எதிர்வினைகளையும் கொண்டிருக்கும் என்பதை தான் இந்த சைபர் குற்றங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.   அந்த வகையில் சென்னையில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 1,679 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,589 வழக்குகள் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்கள் ஆகும்.


ரூ.189 கோடி இழப்பு:


போலீசார்டம் வழங்கப்பட்ட பல்வேறு மோசடி புகார்களின் அடிப்படையில், சைபர் குற்றங்கள் வாயிலாக சுமார் ரூ.189 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி, பெடக்ஸ் கூரியர் மோசடி, ஸ்கைப் மோசடிகள், போலீஸ் அதிகாரி பெயரில் மோசடி, ஆன்லைன் பகுதிநேர வேலை மோசடி, திருமண மோசடி, பரிசு மோசடி என மோசடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


இதுபோன்ற மோசடி வாயிலாக பொதுமக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சைபர் கிரைம் போலீசாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பது தொடர்பாக அப்பிரிவு போலீசாருக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளார்.


பொதுமக்களுக்கு எச்சரிக்கை:


பொதுமக்கள், அதிக லாபம் தருவதாக வெளியாகும் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகள், வலைதளங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறியாத வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்த வேண்டாம். சைபர்குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்டால் சைபர் குற்றங்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார். மேலும், முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளில் உள்ள, இணைய லிங்கை கிளிக் செய்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.


பணத்தை மீட்பது எப்படி?


நிதி இழப்பு சைபர் குற்றங்களில் பணத்தை இழந்தவர்கள் என்சிஆர்பி பதிவு செய்து, பிறகு தங்கள் எல்லைக்கு உட்பட்ட சைபர் குற்ற போலீஸ் நிலையத்தை அணுகி, சந்தேகத்திற்கிடமான முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் தங்களது பணம் முடக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். என்சிஆர்பி பதிவு எண் மற்றும் சைபர் போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளியின் வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்ட தொகைகளை பெறுவதற்காக தங்கள் எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் சட்ட பிரிவின்படி மனு தாக்கல் செய்யலாம்.