சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 14 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  சுமார் ஒரு மணி நேரமாக திக் திக் என 14 பேரும் சிக்கித்தவித்துள்ளனர்.


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ப்ளாட்பாரத்தில் இருந்து வெளியே செல்லுவதற்கு ஏதுவாக லிப்ட் வசதி ஒன்று உள்ளது. அந்த லிப்டில் பலரும் ஏறி இறங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 8 மணி அளவில் அந்த லிப்டில் ஒரு கூட்டம் ஏறியுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள், ஒன்றரை வயது குழந்தை என மொத்தம் 14 பேர் லிப்டுக்குள் சென்றுள்ளனர். சர்ரென மேலே கிளம்பிய லிப்ட் திடீரென பாதியில் நின்றது. 




மின்சாரம் தடையா என சில நிமிடங்கள் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. நேரம் ஓடிக்கொண்டே இருந்தாலும் லிப்ட் நகரவில்லை. ஏதோ கோளாறு என்பதை உணர்ந்தவர்கள் லிப்டுக்குள் எழுதப்பட்டிருந்த லிப்ட் ஆபரேட்டருக்கு அவசரமாக போன் செய்துள்ளனர். ஆனால் அந்த எண்ணால் ஒரு பயனும் இல்லாமல் போனது. இதனால் லிப்டுக்குள் இருந்தபடியே அனைவரும்கூச்சலிட்டுள்ளனர்.  14 பேர் ஒரே லிப்ட்டுக்குள் சிக்கியதால் சரியான காற்றோட்டமும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பயணிகள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளனர். 


பின்னர் இது தொடர்பாக தீயணைப்படை மற்றும் ரயில்வே காவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பயணிகளை மீட்கும் வேலையில் ஈடுபட்டனர். லிப்டின் மேல் பகுதியை உடைத்து துளையிட்ட தீயணைப்பு வீரர்கள்  உள்ளே சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அனைவரும் மீட்கப்பட்டனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலைய லிப்ட் இப்படி பழுதாக என்னகாரணம்? முறையாக பராமரிக்கப்பட்டதா? போன்ற கேள்விகளை பயணிகள் எழுப்பினர். 


என்ன காரணம்?


இது குறித்து தெரிவித்த தீயணைப்பு வீரர்கள், அதிக பளு காரணமாக லிப்ட் கோளாறாகி இருக்கலாம். முறையான பராமரிப்பும் இல்லை. அதனால் லிப்ட் நின்றுவிட்டது. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அனைவரும் மீட்கப்பட்டனர் என்றனர்.


இது குறித்து தெரிவித்த ரயில் பயணிகள், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் பலரும் லிப்டை அதிகம் பயன்படுத்துவர்கள். எனவே அதனை முறையாக பராமரிக்க வேண்டும். என்றனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண