Chennai Ac Local Train: சென்னை புறநகர் முதல் குளிர்சாதன ரயில், இன்று முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

சென்னையின் முக்கிய போக்குவரத்துக்காக மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்தாகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்கும் ரயில் போக்குவரத்து மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. 

செங்கல்பட்டு - தாம்பரம் -சென்னை கடற்கரை ரயில் பாதை 

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் வழித்தடம், மிகவும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள், இந்த வழித்தடத்தில் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக இந்த வழித்தடம் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

Continues below advertisement

சென்னை குளிர்சாதன வசதி கொண்ட ரயில் - Chennai Local AC Train 

சென்னை ஐ.சி.எப். ஆலையில் ரயில்வே துறை சார்பில், குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்களும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு குளிர்சாதன மின்சார ரெயில்கள் தற்போது தயாரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. மக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில், இந்த ரயில் தயாரிக்கப்பட்டது.

சென்னை ஏசி ரயில் சிறப்பம்சங்கள் என்ன ? Key features of AC train

பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை ஏசி ரயிலில், 12 பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும். இந்த ரயில் வண்டியில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் 5,700 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது. அதேபோன்று தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. ஏசி ரயிலில் படியில் பயணம் செய்வது தவிர்க்கப்படும் உள்ளது. 

இதேபோன்று ரயில் பயணத்தின் போது குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவசர காலங்களில் நேரடியாக ரயில் ஓட்டுநரிடம் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது

எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்? 

இந்த குளிரூட்டப்பட்ட ரயில் பிரதான சாலையில் செல்லும்போது, செங்கல்பட்டு, பரனூர், சிங்கப்பெருமாள் கோவில் , பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், திரிசூலம், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்னை பூங்கா, சென்னை கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

செயல்பாட்டிற்கு வருவது எப்போது ?

இன்று முதல் சென்னையின் முதல் புறநகர் குளிர்சாதன ரயில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செயல்பாட்டிற்கு வரவுள்ளது. கோடைகாலத்தில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் பொதுமக்களிடையே வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த ரயில் சேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஏசி ரயில் பயன்பாட்டிற்கு வரவில்லை என விமர்சனம் எழுந்திருந்தது, இந்த நிலையில் நேற்று இரவு திடீரென இன்று முதல் ஏசி ரயில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.