வழக்கமாக தமிழ்நாட்டில் கோடை காலம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் தமிழ்நாட்டில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே மாதம் 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது.


அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?


கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும் யோசிப்போம்.  பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை தான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது.


எப்போது தொடங்குகிறது?


தமிழ் மாதத்தில் சித்திரை மாதம் 21 ஆம் தேதி துவங்கி, வைகாசி மாதம் 15 ஆம் தேதி வரையிலான 25 நாட்களை அக்னி நட்சத்திர காலம். அதன்படி, ஆங்கில மாதத்தில் மே 4-ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.


அக்னி நட்சத்திரம் அறிவியல் பெயரா?


அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் என்ற வார்த்தைகளை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துவதில்லை. ஏனேனில், ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால், மே மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரிப்பது குறித்து வானிலை ஆய்வு மையம் கண்காணிக்கும். 


பாதுகாப்பாக இருங்க!


வெப்பநிலை அதிகமாக இருக்கும். எனவே அவசியமின்றி மக்கள் பகல் பொழுதில் வெளியே வருவதை தவிர்க்கலாம். மேலும் பழங்கள், தண்ணீர், செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படாத குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை அருந்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.உப்பு கலந்த எலுமிச்சை சாறு சாப்பிடலாம். சப்ஜா விதை, பாதாம் பிசின் உள்ளிட்டவற்றை சேர்த்த ஜூஸ், எலுமிச்சை சாறு அருந்தலாம். 


சிட்ரஸ் சத்து மிகுந்த பழங்கள்


எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த வகை பழங்களைச் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. 


 சில டிப்ஸ்:



  • மதிய நேரத்தில் (12.00P.M-3.00P.M ) வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். 

  • அவசியம் இல்லையெனில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம்

  •  தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

  •  அதிக உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை மதிய நேரங்களில் செய்வதைத் தவிர்க்கவும்.

  •  வெளியே செல்லும்போது எப்போதும் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச்செல்வதை பழக்கமாக்கி கொள்ளவும்.

  •  குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.

  •  உடல் சோர்வுற்றலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

  •  மோர், எலுமிச்சை தண்ணீர் போன்ற வீட்டில் செய்யும் பானங்களைப் பருக வேண்டும். அதிகம் சர்க்கரை உள்ள கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் வேண்டாம்.

  • பருத்தி ஆடைகளை அணியலாம். காற்றோட்டமான உடைகள் அணிவது நல்லது. 

  • காலை, இரவு என இரண்டு வேளையும் குளிக்கலாம். அதிகம் ரசாயனம் கலந்த சோப்களை பயன்படுத்த வேண்டாம்.

  • இயற்கையான கடலை மாவு, பயித்த மாவு வகைகளை குளிக்க பயன்படுத்தலாம்.