விநாயகர் சதுர்த்தி வந்தாச்சு...நாளைய பொழுது முழுதும் கொண்டாட்டம்தான். மோதகப் பிரியன் எனும் பெயரால் பிள்ளையாரும் அவருக்குப் பிடித்த கொழுக்கட்டையும் ஒன்று சேர நம் ஊரில் பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடப்படுகின்றன.


விநாயகர் சதூர்த்தி:


எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முடிய முதலில் வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான்.ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.பிள்ளையார் சதுர்த்தி என்றாலே முந்தி விநாயகருக்கு முந்தி நம் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை. முதலில் வீடு, கோயில் அல்லது பொது இடங்களில் விநாயகர் சிலையை பிரதிஷ்டி செய்து மந்திரங்கள் ஓதி பூஜை செய்கின்றனர்.


பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம், வாசனை எண்ணெய்களால் விநாயகரைக் குளிப்பாட்டி அலங்கரித்து பாசுரங்கள் மந்திரங்கள் ஓதி வணங்குவர்.பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாக்களில் மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும், அனைத்து வயதினரும் பங்கேற்கின்றனர்.  குறிப்பாக வட இந்திய மக்கள் ஆடிப் பாடி பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகின்றனர்.






வாஸ்து டிப்ஸ்:


வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்ன?


வீடுகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யும்போது, மேற்கு, வடக்கு அல்லது வட கிழக்கு திசைகளில் வைப்பது உகந்தது. விநாயகரின் சிலையோ, படமோ  வீட்டு வாசலை பார்த்தவாறு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.


எது சிறந்தது:


வாஸ்க்து சாஸ்திரத்தின்படி, வெள்ளை நிற விநாயகர் சிலை வீட்டில் செய்யும் பூஜைக்கு நல்லதென கூறப்படுகிறது. வெள்ளை நிற விநாயகர் அமைதி மற்றும் செழிப்பின் உருவமாக கருதப்படுகிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மண்ணாலான சிலைகளை பயன்படுத்துமாறும் சொல்கின்றனர்.


விநாயகர் சதூர்த்தி நாளில் எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிட்டட்டும். வாழ்த்துகள்.


பால் கொழுக்கட்டை


தேவையான பொருள்கள்


அரிசி மாவு - 1/2 கப்


தேங்காய் பால் - 1/2 கப்


சர்க்கரை - 1/4 கப்


ஏலக்காய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்


தண்ணீர் - 2 கப்


உப்பு - 1/2 டீஸ்பூன்


தேங்காய்த் துருவல் - 1/4 கப்


செய்முறை


அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கிளறவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும். பின் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். வாணலியில் தண்ணீர் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின் உருண்டைகளை போட வேண்டும்.


15 நிமிடத்துக்கு பின் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.10 நிமிடம் கழித்து தேங்காய் பால் மற்றும் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து 10 நிமிடம் கொதித்த பின் கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்.