தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நெய்தல் கலைவிழா நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன்,அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.




விழாவில் பேசிய கனிமொழி எம்பி, நம்முடைய மண் சார்ந்த கலைகள் ஒரு பொக்கிஷம். நம் வாழ்க்கையை இந்த கலைகள், அதன் உள்ளே வடித்துக் கொள்கிறது. மற்ற கலைகள் வெளியில் இருக்கக் கூடிய தேடல்களை, மதம் சார்ந்த, இறை உணர்வுகளை பிரதிபலிக்க கூடியவையாக உள்ளன. கிராமிய பாடல்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு செய்து உள்ளன. வெள்ளம், வறட்சி, வெளியூருக்கு வேலைக்கு செல்லுதல், சின்ன, சின்ன கனவுகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்யக்கூடியது நம் மண் சார்ந்த கலைகள்தான்.




அந்த கலைகளில் தான் நம் சமூகத்தை பார்த்த கேள்விகள் உள்ளன. சமூகத்தில் நாம் எதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, சமூகத்தின் மீது உள்ள விமர்சனங்கள், கேள்விகளை தொடர்ந்து முன்வைக்கும் விஷயமாக இந்த மண் சார்ந்த இசை, கலைகள் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கின்றன. இந்த கலை வடிவங்கள் உயிர்ப்போடு இருக்கக்கூடிய கலை வடிவங்கள் ஆகும். நம்முடைய வாழ்க்கையோடு அதனுடைய பயணங்களும் உள்ளன. நம்முடைய வாழ்க்கை மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கான பாடல்களும் உள்ளன. இந்த கலை வடிவங்கள் உயிர்ப்போடு வாழ்க்கையை, சமூகத்தை, கேள்விகளை, நம் அரசியலை எடுத்து முன்வைக்க கூடியதாக இருக்க வேண்டும். 




இந்த கலைவடிவங்கள் அந்த வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றன. இதனை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டு இருந்தார். முதல்-அமைச்சரும் இந்த நிகழ்வுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். உணவும், கலைகளும் தான் நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும். இல்லையென்றால் அகழ்வாராய்ச்சி செய்துதான் எடுத்து வர வேண்டும். ஆனால் இந்த கலை வடிவங்கள் அதை நமக்கு பாதுகாத்து ஒவ்வொரு நாளும் தரக்கூடியது. அதனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றார்.




விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். தொழில் வளர்ச்சியாக இருந்தாலும், மக்களின் எந்த பிரச்சினையாக இருந்தாலும், தொகுதிக்கு அனைத்து திட்டங்களையும் பெற்று தரும் வகையிலும் கனிமொழி எம்.பி. செயல்பட்டு வருகிறார். நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். தமிழகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும், பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டும், தமிழ் மொழியை காத்திட வேண்டும், நம் பாரம்பரியம், கலாச்சாரம், வாழ்க்கை முறையை, உணவு பழக்க வழக்கங்களை பாதுகாக்க வேண்டும்  என்றார். 




விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, கனிமொழி எம்.பி நகரத்திலே வளர்ந்தாலும் நாட்டுப்புற கலைகளை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நெய்தல் கலை விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் இருந்தாலும், தூத்துக்குடிதான் முத்து குளிக்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி மீனவர்கள் சார்ந்த பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் அமைந்து உள்ளது.  தமிழர்களின் பெருமையை சொல்லும் வகையில் கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாராய்ச்சிகளை செய்து தமிழர்களின் பாரம்பரியத்தை வெளியில் கொண்டு வரும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் செயல் பட்டு வருகிறார். அதே போன்று தமிழர்களின் பாரம்பரிய கலைகளை காப்பாற்ற வேண்டும் என்ற வகையில் எம்.பி சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளார் என்றார்.


.


தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்களின் பறையாட்ட நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நையாண்டி மேளம், காவடியாட்டம், பறையாட்டம், ஜிக்காட்டம், புலியாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதே போன்று உணவுத்திருவிழா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும் நடந்தது. இந்த விழா வருகிற 10-ந் தேதி வரை தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண