முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 250 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.




இதனிடையே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது உதவியாளர் நாரயணசாமி, மகன் அசோக்குமார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர்கள் சிபி, சுனில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிய கண்ணன் ஆகியோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்


இந்நிலையில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் தனிப்படை காவல் துறையினர் தொழிலதிபர் செந்தில்குமாரிடம் நேற்று சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். மணல் ஒப்பந்ததாரர் ஓ. ஆறுமுகசாமியின் மகனான இவர், செந்தில் பேப்பர்ஸ் மற்றும் போர்ட்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் காவேரி ஆற்றுப் படுகையில் மணல் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்த ஓ.ஆறுமுகசாமி, சசிகலா மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் நெருக்கமானவராக அறியப்பட்டார்.




இதனிடையே கடந்த 2017 ம் ஆண்டு செந்தில் பேப்பர்ஸ் மற்றும் போர்ட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் உள்ள ஷைலி நிவாஸ் என்ற அபார்மெண்டில் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். கோடநாடு தொடர்பான வருமான வரித்துறை ஆவணங்களை கேட்டு பெற்ற தனிப்படை காவல் துறையினர், கோடநாடு நிர்வாகத்திற்கும், செந்திலின் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிந்தனர். இதன் அடிப்படையில் சம்மன் அனுப்பிய தனிப்படை காவல் துறையினர் கோடநாடு எஸ்டேட் தொடர்பாக செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர்.


இதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக செந்தில்குமாரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமியும் விசாரணைக்காக இன்று ஆஜரானர். அவரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில்குமாரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடந்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் தந்தை, மகன் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண