'வானமகள் நாணுகிறாள், வேறுஉடை சூடுகிறாள்' ரேஞ்சிற்கு கீழ்வானம் சிவக்க, அதே பாடல் ஒலிக்கும் ஒரு பொன்மாலைப்பொழுதில், சூடாக ஒரு கப் டீ… வாழ்வின் அர்த்தங்களை கற்றுத்தரும் நேரமல்லவா அது! நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட, பிரிக்கமுடியாத மந்திர பானமாக மாறிவிட்ட தேநீர், இந்தியாவில் எத்தனை எத்தனையோ விதமாக கிடைக்கிறது, தண்ணீருக்கு பிறகு அதிகம் குடிக்கும் ஒரு பானம் என்றால், அது ’டீ’ தான்.


ஒரு காலத்தில் சில வகை பிளேவர் ’டீ’க்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஏராளமான பிளேவர்களில் ’டீ’கள் கிடைக்கின்றன. உலக அளவில் நடைபெறும் தேயிலை உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு மொத்தம் 25 சதவிகிதமாகும். மேலும், இரண்டாவது மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளராகவும் உள்ளது. உலக அளவில் நான்காவது ஏற்றுமதியாளராகவும், இந்தியா இருக்கிறது.


அப்படிப்பட்ட இந்தியாவில் கிடைக்கும் வகை வகையான டீக்கள் ஒவ்வொன்றும் அதன் பிளேவர் மற்றும் ரெசிபிகளுக்கு ஏற்ப சுவை, ஆரோக்கிய பலன்களை கொண்டிருக்கின்றன. வாமனன் திரைப்படத்தில் அறியாமல் ஜெய் உப்பு போட்டு குடித்துவிட்டு பரிதாபமாக ஒரு கதை சொல்லி சமாளிப்பார். ஆனால் உண்மையில் இந்தியாவில் உப்பு போட்டு குடிக்கும் தேநீரெல்லாம் இருக்கின்றன.


பட்டர் டீ, நூன் டீ போன்ற டீக்களில் உப்பு போட்டு குடிக்கிறார்களாம். புதினா டீ, கிரீன் டீ, ஹெர்பல் டீ ஆகியவற்றை குடிக்குமாறு மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றன. எடை இழப்பு, மெட்டாபாலிக் வளர்ச்சி, இதய ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்கு உதவும் டீ, தோல் ஆரோக்கியத்துக்கும் உதவும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?. டீயில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உங்கள் தோல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றன. இந்தியாவில் எத்தனை வகை டீ கிடைக்கிறது என்று பார்க்கலாம்.



மசாலா டீ


உலகிலேயே அதிக அளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா. தேயிலை செடிகள் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், ஆங்கிலேயர்கள் அதை உற்பத்தி செய்யத் தொடங்கிய பின்னரே அவை ஒவ்வொரு வீட்டு அண்ணத்திலும் ஒரு பகுதியாக மாறியது. இருப்பினும், இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் கலந்து வாழப்பழகிய ஒரு ஒன்றியமாக இருக்கும் காரணத்தால், உள்ளூர்வாசிகள் இப்போது மசாலா டீ என்று அழைக்கப்படும் தேநீர் பானத்தை உருவாக்கினர். பால், சர்க்கரை மற்றும் இஞ்சி, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை போன்ற சுவையான மசாலாப் பொருட்களுடன் வேகவைக்கப்பட்ட இந்த தேநீர் இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களும் தங்கள் வாழ்வோடு இணைத்துக்கொண்ட ஒன்று, இருப்பினும் இந்த பால் சேர்த்து உருவாக்கப்படும் டீயை ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்முறையில், ஒவ்வொரு சுவையில் செய்கிறார்கள். "மனிதர்கள் டீ என்கிற ஒரு பானத்தை எவ்வாறெல்லாம் தயாரிக்க கற்றுக்கொண்டார்கள்" என்று வியப்பார் பிரபஞ்சன்!



அசாம் டீ  


அஸ்ஸாம் தேநீர் என்பது காமிலியா சைமென்சிஸ் ஆலைகளின் இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பிளாக் டீ . அசாம் தேநீர் அதன் மாலி சுவை, ஆழ்ந்த வாசனை, கிளாசிக் நிறம் மற்றும் சுறுசுறுப்பாக்கும் அதன் விளைவுகளுக்காக பிரபலமாக அறியப்படுகிறது. இந்த தேநீரை பால், மற்றும் சர்க்கரை சேர்க்காமலேயே சுவையாக உருவாக்க முடியும் என்று பெயர் பெற்றதாக கூறுவார்கள். பெயரில் உள்ளது போலவே அசாமில் இருந்து கிடைக்கும் இந்த தேநீர் வகை கேன்சர் வராமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.



கிரீன் டீ


இது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியும் தருகிறது! பச்சை தேயிலைகள் மூலம் தேயிலை பூக்களின் வாசம் கலந்து, பழத்தின் சுவையை கலந்து உருவாக்கப்படும் தேநீர் இது. நேரடியான பச்சை தேயிலை சுத்தமான சுவையை கொண்டுள்ளது, மனநிலையை உடனடியாக மேம்படுத்துகிறது. க்ரீன் டீயின் ஆண்டி ஆக்சிடன்ட்டுகள் குறித்த பிம்பத்தை சென்ற வார வைரல் வீடியோ ஒன்று அடித்து துவைத்திருந்தாலும், அவை உடலில் சக்திவாய்ந்த விளைவுகளையும், தேநீரின் ராவான சுவையையும் கொண்டிருப்பதால் ஒரு தவிர்க்க முடியாத தேநீர் பானமாகவே உள்ளது.



பட்டர் டீ


குர் குர் சாய் என்றும் அழைக்கப்படும் இந்த வெண்ணெய் தேநீர் லடாக் மற்றும் சிக்கிமில் பிரபலமாக உள்ளது. இதன் வரலாறு திபெத்தில் இருந்து வந்தாலும், அந்தகால இந்தியாவில் அவர்கள் விட்டு சென்ற ஒரு பாபரியம் இது. இது பாரம்பரியமாக தேயிலை இலைகள், யாக்கிலிருந்து கிடைக்கும் பாலில் செய்த வெண்ணெய், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இமயமலை நாடோடிகள் ஒரு நாளைக்கு 30 கோப்பைகளுக்கு மேல் இந்த தேநீரை குடிப்பதாக அறியப்படுகிறது! நம்மூர் பசும்பால் வெண்ணெயுடன் கூட இதனை தயாரிக்கலாம், இந்த தேநீர் மிகச் சிறிய கோப்பைகளில் குடிக்கப்படுவதால், குடிப்பவர்களை மேலும் மேலும் ஏங்க வைக்கும் என்று கூறுகிறார்கள். பேலியோ டயட் இருப்பவர்கள் இந்த தேநீரை குடிப்பதால் நல்ல மாற்றம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.



காஷ்மீரி டீ


காஷ்மீரின் பள்ளத்தாக்குகளில் தோன்றிய இந்த டீயை காஷ்மீரி கஹ்வா என்று அழைக்கின்றனர், செழுமையான சுவைகளுடன் ஒரு கவர்ச்சியான டீயாக உள்ளது. மற்ற காஷ்மீரி பானங்களைப் போலவே, இதுவும் சிக்கலானதாகத் தெரியும், ஆனால் தயாரிப்பது எளிது. கொதிக்கும் வெந்நீர் மட்டுமே தேவை, அதில் இலவங்கப்பட்டை, குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்கள் சேர்க்கப்பட வேண்டும். முடிவில், பச்சை தேயிலை இலைகள் இந்த கலவையில் சேர்க்கப்பட வேண்டும், அதனை நாம் விரும்பும் அளவுக்கு ஸ்ட்ராங்காக தயாரித்துக்கொள்ளலாம். அதன் மேல் தேன் மற்றும் பாதாம் சில்வர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த செழுமையான மற்றும் ருசியான தேநீர் ஒரு குளிர்கால நாளில் அனுபவிக்கும் போது மிகவும் சுவையாக இருக்குமாம், காஷ்மீர் என்ற பெயருக்கு பிறகென்ன மரியாதை!



நூன் டீ


மற்றொரு பிரபலமான காஷ்மீரி தேநீர் தயாரிப்பு, நூன் சாய் அல்லது ஷீர் சாய் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் செய்யப்படும் இந்த தேநீர் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தை அடையும் வரை ஏலக்காய் மற்றும் பேக்கிங் சோடாவுடன் தேயிலை இலைகளை காய்ச்சுவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீர் பொதுவாக பால் மற்றும் உப்புடன் சேர்த்து தயாரிப்பார்கள். விருப்பப்படி பாதாம், பிஸ்தா மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்துக்கொள்ளலாம். இது இந்திய தேநீர்களில் பிரபலமான வகைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.



நீலகிரி டீ


நீலகிரி தேயிலை, நீல மலை தேயிலை என்று பரவலாக அறியப்படுகிறது, இது மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியில் உள்ளது. ஊட்டி சென்றால் இதனை வாங்கச்செய்யாமல் திருப்பி அனுப்பமாட்டார்கள் அந்த ஊர் வியாபாரிகள். இது மிகவும் நறுமணம், சுவை மற்றும் கருமையான அம்சங்களால் உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் ஒரு தேநீர் ஆக இருக்கிறது. நீலகிரி தேநீர் ஐஸ் டீயாக குடிப்பதற்கு மிகவும் உகந்ததாக கூறுவார்கள். கூடுதலாக, அதன் நன்மைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் எடையைக் குறைப்பது மற்றும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவது வரை செல்கிறது.



டார்ஜிலிங் டீ


டார்ஜிலிங் தேநீர் பற்றி அறியாதவர்கள் அரிது, ஏறக்குறைய அனைத்து இந்தியர்களும், உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இந்த தேநீர் வகைக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள். ஏனெனில் இந்தியாவின் மிகப்பழமையான தேநீர் வரலாற்றை கொண்டிருப்பது இந்த தேநீர்தான். இது வெள்ளை, கருப்பு, பச்சை மற்றும் ஊலாங் போன்ற பல வகைகளை உள்ளடக்கி உள்ளது. பொதுவாக, டார்ஜிலிங் தேநீர் ஒரு தனித்துவமான நறுமண வாசனையைக் கொண்டுள்ளது, இது இனிமையானதாகவும் நுட்பமானதாகவும் இருக்கும். இது இரைப்பை புண்கள் மற்றும் உடல் பருமனை தடுக்க உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.