காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலின் அடையாளமாக உலகெங்கும் விளங்குவது ரோஜா. காதலர் தினத்தில் தங்களது காதலை வெளிப்படுத்த விரும்பும் ஒவ்வொருவரும் தனது துணைக்கு ரோஜாவை வழங்கி காதலை வெளிப்படுத்துவார்கள். ரோஜா பூ சிவப்பு, பிங்க், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது.


எந்த நிற ரோஜா எந்த உணர்வை வெளிப்படுத்தும் என்பதை கீழே காணலாம்.


சிவப்பு ரோஜா:


காதலர்கள் பெரும்பாலும் தங்கள் துணைக்கு சிவப்பு நிற ரோஜாவையே அன்பளிப்பாக வழங்குகின்றனர். சிவப்பு நிற ரோஜா ஆழ்ந்த உணர்வுகளை, ஆழமான அன்பை வெளிப்படுத்தும் அங்கமாக சிவப்பு நிற ரோஜா கருதப்படுகிறது. இந்த சிவப்பு நிற ரோஜாவை அன்பளிப்பாக வழங்குவது எல்லையற்ற அன்பையும், அளவில்லா பாசத்தையும் வெளிப்படுத்தும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த சிவப்பு நிற ரோஜாவை அன்பளிப்பாக வழங்குகின்றனர்.


பிங்க் ரோஜா:


பிங்க் நிறம் எனப்படும் இளஞ்சிவப்பு நிற ரோஜா ஒருவரை பாராட்டுவதற்கும், ஊக்குவிப்பதற்கும் வழங்கப்படும் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. ஏதேனும் ஒரு துறையில் சாதித்த ஒருவரின் முயற்சிகளை பாராட்டும் விதமாகவும், அவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த இளஞ்சிவப்பு நிற ரோஜா வழங்கப்படுகிறது. மென்மையான உணர்வுகள், கருணையை வெளிப்படுத்தும் ஒன்றாக இளஞ்சிவப்பு ரோஜா கருதப்படுகிறது.


வெள்ளை நிற ரோஜா:


வெள்ளை நிற ரோஜா ஆன்மீகம் மற்றும் புதிய தொடக்கங்களை வெளிப்படுத்தும் ஒன்றின் அடையாளமாக உள்ளது. வெள்ளை நிறம் என்பது தூய்மையை குறிக்கும் ஒன்றாக உள்ளது. வெள்ளை நிற ரோஜா தூய்மை மற்றும் வாக்குறுதியின் அடையாளமாக கருதப்படுகிறது.


மஞ்சள் நிற ரோஜா:


மஞ்சள் நிற ரோஜா நல்ல உடல்நலம் மற்றும் நீடித்த நட்பை வெளிப்படுத்தும் அடையாளமாக திகழ்கிறது. மஞ்சள் நிற ரோஜாவானது ஒரு தூதுவராக கருதப்படுகிறது. தோழமை மற்றும் வாழ்த்துகளை தெரிவிக்கும் ஒன்றாக உள்ளது.


காதலர் தினமானது ஆண்டுதோறும் ரோஜா தினத்துடன் தொடங்குகிறது. நடப்பாண்டிற்கான ரோஜா தினம் நாளை கொண்டாடப்படுகிறது.