பிரியாணி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? மசாலாக்களின் கலவையுடன் சேர்ந்து காரசாரமாக கிடைக்கும் பிரியாணிக்கு ஏராளமானோர் அடிமை. மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, வெஜ் பிரியாணி போன்ற பலவகை பிரியாணிகள் உள்ளன. இந்த வரிசையில் காளான் பிரியாணியும் அதிகமானோருக்கு ஃபேவரைட்.


காளானில் துத்தநாகம், பித்தளை, மினரல், பொட்டாசியம், சோடியம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் இரும்புச் சத்து உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த காளான் பிரியாணி எப்படி செய்வது? என்றுதான் பார்க்க போறோம். 


தேவையான பொருட்கள்


பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய பட்டன் காளான் - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 2, ரெட் சில்லி சாஸ் ஒரு டேபிள் ஸ்பூன், சோயா சாஸ் -  ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை


இஞ்சி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். 


அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


கடாயில் சிறிதளவு நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


இரண்டு தக்காளிகளையும் சுடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தோலை உரித்துக்கொள்ள வேண்டும். பின் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


குக்கரில்  தேவையான அளவு எண்ணெய் - நெய் ஆகியவற்றை  சேர்த்து, சூடானதும் பட்டன் காளானை அதில் சேர்க்க வேண்டும். பின் இஞ்சி, வெங்காயம், முந்திரி ஆகியவற்றை அதில் சேர்த்து வதக்க வேண்டும். 


வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறி விட வேண்டும். பின்  அதில் தக்காளிச் சாறு ஊற்றி பச்சை வாசனை போகும்வரை வதக்கி விட வேண்டும்.  அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதி வந்ததும் பாசுமதி அரிசியைப் சேர்த்துக் கிளறி, குக்கரை `வெயிட்’ போட்டு மூடி, 2 விசில் வந்த உடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும். 

குக்கரில் ப்ரஷர் அடங்கிய உடன் குக்கரை திறந்தால் சூடான மஷ்ரூம் பிரியாணி தயாராக இருக்கும். இப்போது பிரியாணியை கரண்டியால் அரிசி உடையாமல் பக்குவமாக கிளறிவிட்டு பறிமாறலாம். காரசாரமான காளான் பிரியாணி, சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க


Annamalai: அண்ணா பற்றிய கருத்து சரி; மன்னிப்பு கேட்க முடியாது.. அண்ணாமலை ஆவேசம்..!


ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு; தன் உயிர் போன நிலையிலும் 18 பேரை காப்பாற்றிய மாமனிதர்