தபால் கொண்டுவரும் போஸ்ட்மேன், பால் கொண்டுவரும் பால்காரர், ஓட்ட உடைசல் தைக்கும் டெய்லர் அண்ணன் இப்படி எல்லாரையும் சைக்கிள்தான்  கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் அறிமுகம் செய்தது. 90ஸ் கிட்ஸ்களும் எஞ்சாய்மெண்ட்டே வாடகை சைக்கிள்தான்.



 

இப்படி எல்லாத்துக்கும் பயன்பட்ட சைக்கிள் டிஜிட்டல் வாழ்க்கையில் பேஷனாக மட்டும் பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் சைக்கிள் உடல் எடையை குறைக்கும் கருவியாக தான் எல்லோருக்கும் பயன்படுகிறது. அதற்கு மேல் சொற்பமான நபருக்கு தான் சைக்கிள் வாழ்க்கையோடு பிணைகிறது. உடம்ப குறைக்கவாச்சும் சைக்கிள் பயன்படுகிறதே என்று லேசா பெருமைப்பட்டுக்கதான் வேணும்.

 



 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி 'சைக்கிள்' ஓட்டுவதன் தனித்துவம் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உள்ளூர்ல  மட்டுமில்லாம இந்தியா முழுதும் சைக்களில் சென்று குழந்தைகளுக்கு கதை சொல்லிவந்த குமார்ஷாவிடம் உலக சைக்கிள் தினத்தில் பேசினோம்...," படிப்பு எனக்கு என்னவோ இன்ஜினியரிங்தான். ஆனா பிடிக்குற  வேலைய மட்டும்தான் செய்வேன். பயணப்படுறதும், நினைவுகள சேகரிக்கிறதும்தான் என்னுடைய வேலை இருந்துட்டு இருக்கு"

 



என்று தன் இயல்பைச் சொல்லி மீண்டும் தொடர்கிறார். "சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயில் பக்கத்துல. ஆனா வளர்ந்தது என்னவோ சேலம், சென்னை, அருப்புக்கோட்டை, கோவைனு  பல இடங்கள சொல்வேன். நான் ஒரு இன்ஜினியரிங் மாணவன்.  என்னுடைய பயணம் 2007-ல் துவங்கியது. 'அறம் பவுண்டேசன்' என்ற அமைப்பை உருவாக்கி நண்பர்களோட கிராமங்கள நோக்கி பயணம் செஞ்சோம்.  அங்க இருந்து தான் கதைகள் மீதும், அதை காது கொடுத்து கேட்கும் குழந்தைகள் மீதும் ஆர்வம் வந்தது. கதைக்கு கால அளவே இல்லாம மாறியது. கதைக்குள் பயணம், பயணத்திற்குள் கதை என்று மாறி, மாறி வருசம் போனதே தெரியல.  இந்தியா முழுதும் கிட்டதட்ட 24 மாநிலங்களுக்கு சைக்களில் பயணம் செஞ்சுட்டேன். அதேபோல்  பஸ், ட்ரையின்னு, நடைபயணம்னு என்னோட பயணம் மாறிகிட்டே இருக்கும். இதில்  சைக்கிள் பயணங்களை எப்பவும் மறக்கமுடியாது.

 



ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை இருக்கும். சத்தியமங்கலத்தில் வசிக்கும் குழந்தைககளிடம் யானை கதை கிடைக்கும். வட மாநிலங்கள்ல காண்டாமிருகம் கதை கேக்க முடியும். இப்படி ஒவ்வொரு இடத்துலையும் வேற, வேற கதைகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு நான் கதை சொல்வேன். அவங்ககிட்ட இருக்க கதைய நான் கேட்டுக்குவேன். இப்படி மாறி, மாறி சைக்கிள் பெடல்மாதிரி கதை நகரும். ஒவ்வொரு முறை நான் கதை சொல்ல கிளம்பும்போதும் என்னிடம் 1000 ரூபாய்க்கு குறைவாதான் காசு இருக்கும். அதைப் பத்தி கவலைப்பட்டதில்லை. பயணம் என்னை தொடர்ச்சியாக பயணிக்க வைத்தது. பல நண்பர்களால் இயங்க முடிந்தது. எனக்கு இலக்கு என்பதே.., இல்லை. ஒரு நதிபோல இருக்க ஆசைப்படுகிறேன். நதி எப்படி ஒரு குட்டைக்கு செல்லவும், பள்ளத்திற்குள் செல்லவும் பயம் இல்லாமல் தன்னை மாற்றிக்கொள்கிறதோ. அதே போல் என் பயணத்தையும், கதையும் மாற்றிக்கொள்கிறேன்.



 

என்னுடைய அதிகம் கதை இல்லை. ஆனால் என்னால் பல கதையை உருவாக்கி முடியும் அதைதான் குழந்தைகள் விரும்புகின்றனர். அதையேதான்  நானும் விரும்புறேன். இன்று மதுரையில் இருந்தால், நாளை எங்கே இருப்பேன் என்று எனக்கே தெரியாது. அப்படியான சைக்கிள் பயணத்தில் தான் குழந்தைகளுக்கு கதை சொல்லுவேன். ஒரே நிலப்பரப்பில் பலவிதமான கதைகள் உள்ளது.

 



 

களிமண் பொம்மையாகவும், காகிதமாகவும் கதைகளையெல்லாம் குழந்தைகள்கிட்ட கடத்தும்போது, அது ஒரு எமோஷனா மாறும். இப்படி சைக்கிள் மூலம் கதைகள் சேர்த்தது பல ஆயிரம். சைக்கள் ஓட்டும் போது வலி ஏற்பட்டது, ஓட்டிக்கொண்டே இருந்தேன் வலிகளே மறந்து போச்சு. கதைகள கடத்தவும், பெறவும் சைக்கிள் எனக்கு மிகவும் உதவியா இருந்துச்சு" என்று தன் நினைவுகளை பகிர்ந்தார் குமார்ஷா.




 



’சைக்கிள்’ ஓரு இரும்புக் கழுதை' என்பார், மேலாண்மை பொன்னுசாமி. இப்படி பலரது வாழ்க்கையில் சைக்கிள் ஒரு அங்கமாக இருந்துள்ளது. சைக்கிள் ஓட்டுவதை அலட்சியமாக நினைக்காமல் சுற்றுச்சூழலுக்கும், நமக்கும் நல்லதென்று குறைந்தபட்சம் அவ்வப்போவதாவது பயணிக்க முயற்சிப்போம்.