பழமையான பொருட்களுடன் இராஜராஜன்


 


அரண்மனையா...,! அருங்காட்சியகமா...,? என்று அனிச்சையாக கேள்வி கேட்கவைக்கிறது ராஜராஜனின் வீடு. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் பல்வேறு கதைகளை ஓசை இல்லாமல் சொல்கிறது. கண்களுக்கு விருந்தளிக்கும் பொருட்கள் அத்தனையும் ஆச்சரியம். பழமையான ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விளக்கங்களை தெரிந்து வைத்திருக்கிறார். சில அரிய பொருட்களை பற்றி உத்தேசமான குறிப்பேனும் வைத்துள்ளார். அரசர்கள் பயன்படுத்திய தனித்துவமான பொருட்கள் முதல், குடிசையில் வைத்து குடிக்க பயன்பட்ட கஞ்சி கும்பா வரை நான்கு தலைமுறையாய் சேகரித்து வைத்துள்ளனர். நாம் தொலைத்த நம் முன்னோர்களின் புழங்கு பொருட்கள் அனைத்தும் வியப்பை ஏற்படுத்தியது.


பழங்கால பொருட்களின் தொகுப்பு


 


குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசி நகரின் அனந்தப்ப நாடார் தெருவில் வசிக்கும் ராஜராஜன் தான் தனது மூதாதையர் சேகரித்து பொருட்களை பொக்கிஷமாக பாதுகாக்கிறார். 'பழமையின் செல்வன்'  என ஊர்காரர்கள்  பட்டப் பெயர் கூப்பிடுவதும் இவருக்கு மகுடம். பட்டாசு ஏஜென்டான இவர்  இந்தியாவில் முதன் முதலில் புழக்கத்திலிருந்த காசுகள் முதல், இன்றளவு புழக்கத்தில் இருக்கும் காசுகள்வரை பத்திரமாக சேமித்து வைத்திருக்கிறார்.

 


ராஜராஜன்


 


மேலும் பழங்காலத்தில் மக்கள் புழங்கிய பல பொருட்களை சேமித்து வைத்துள்ளார். அவரிடம் உள்ள சிறப்பான பொருட்களைப் பற்றி கேட்கதொடங்கினோம். "அந்த காலத்தில் அரசர்கள் வேட்டைக்கு செல்லும்போது வேட்டையாடிய விலங்குகளை சமைத்து உண்பதற்கு ஒரு பாத்திரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். எத்தனை நாள் அந்த பாத்திரத்தில் சமைத்த உணவை வைத்திருந்தாலும் கெடாது காத்துக்கொள்ளும். அதன் பெயர் புலால் உண்கலம். சமைப்பதற்கும், உணவை சேமித்து வைக்கும் பாத்திரம்தான் எனினும் அதில் அவ்வளவு நுட்பமான அழகிய வேலைப்பாடுகள் அமைந்திருக்கும்" என்றவர் வளரி போன்ற வடிவம் கொண்ட பொருள் ஒன்றை காண்பித்தார்.  "இது என்ன பொருள்?"  என்று கேள்வி கேட்டார். உடனே 'வளரி' என்று கூறினோம். ஆனால் அது வளரியில்லை. பழங்கால பெண்கள் கோலாட்டம்  ஆட பயன்படுத்தும் கருவி என்றும்,  அவை வடநாட்டில் இருந்து மரக்கோலாட்டக் கட்டையில் இருந்து பழக்கத்தில் வந்ததாகவும் தெரிவித்தார்.

 

 


பழங்கால நாணயங்கள்


 


அவரிடம் அம்மன் சல்லி என்று ஒரு நாணயம் இருந்தது, அது புதுக்கோட்டை வட்டாரத்தில் பழக்கத்தில் இருந்ததாகவும், அம்மன் படம் பொறிக்கப்பட்டிருப்பதால் அம்மன் சல்லி என்று பெயர் பெற்றதாம். அவ்வூர் மக்கள் வெள்ளி, செவ்வாயில் அந்த காசை செலவு செய்யவே மாட்டார்களாம், பசி வாட்டினாலும் அக்காசை செலவிடமாட்டார்களாம். என்பதையும் பெருமையை கூறினார். அதே போல் அந்த காலத்தில் வீட்டில் காலிங் பெல்லாக செயல்பட்டது நாதங்கி என்னும் கருவிதானாம் வீட்டுக்கதவின் நடுப்புறத்தில் நாதங்கி அமைக்கப்பெற்றிருக்குமாம், வீட்டிற்கு யாரேனும் விருந்தாளிகள் அதை தட்டித்தான் ஓசை எழுப்புவார்களாம்.

 


ராஜராஜன்


 


மன்னர் ஆட்சியில் ஒவ்வொரு மன்னருக்கு கீழ் வெளியிடப் பட்ட நாணயங்களும் கூட பல கதைகள் கூறுகிறது. இவ்வாறு பழங்கதைகள் பேசும் பல நூறு வருடப் பழைய பொருட்கள் பலவற்றை  சேமித்து வைத்துள்ளார், அவற்றையெல்லாம் காண்பதற்கு பல மாதங்கள்கூட ஆகும். இந்த ஆர்வம் எப்படி வந்தது என்று கேட்டவுடன் உற்சாகத்துடன் சொல்ல தொடங்கினார் ராஜராஜன், "நாலு தலைமுறைக்கு முன்னாடி எங்க வீட்டுல இருந்தவங்க பழமையான பொருள சேக்குறதுமேல உள்ள ஆர்வத்துனால கொஞ்ச கொஞ்சமா சேக்க ஆரம்பிச்சாங்க. நாலு தலைமுறைக்கு பின்னாடி எனக்கும் அந்த ஆர்வம் விட்டு போகல, அதனால எல்லா பொருளையும் பத்தரமா பாதுகாத்துட்டே வரேன். இன்னைக்கு வரைக்கும் என்கிட்டே அம்பதாயிரம் காசுக்குமேல இருக்கு.


நாணயங்கள்


 


சில நாட்களா காசுகள் சேகரிக்குறத நிப்பாட்டிட்டேன் நெறய போலிகள் புழக்கத்துக்கு வந்துருச்சு. இம்மாதிரி சேர்க்க விரும்புறவங்களை சுலபமா ஏமாத்திடுறாங்க. அதனால அப்படி யாரும் ஏமாந்துராதீங்கனு சொல்லிக்க விரும்புறேன். ஆர்கானிக் காய்கறினு நிறைய இரசாயன உரம் பயன்படுத்திய காய்கறிகள சிலர் போலியா விற்பனை செய்றமாதிரி போலியான பொருட்கள பாரம்பரியம், பழமைனு பொய் சொல்லி விற்பனை செய்வாங்க அதனால கவனமா பார்த்து வாங்கனும். என்னிடம் காசுகள் மட்டுமில்லாம அப்போ பொழக்கத்துல இருந்த பழையப்பொருட்களும் நெறய இருக்கு, அத பாக்கவே உங்களுக்கு பல நாள் பிடிக்கும். அப்போ செஞ்ச சிலை மாதிரிலாம் இப்போ சிலை செய்யுறதே கஷ்டம் அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் செஞ்சுருப்பாங்க. பாத்தா எவ்ளோ நேரம் வேணாம் பாத்துட்டே இருக்கலாம், சிலைகள் மட்டுமில்ல புழக்க பொருளும் அப்படி தான்,இத்தனைக்கும் அந்த காலத்துல எல்லாமே கைல தான் செஞ்சுருக்காங்க.


 

இதையெல்லாம் பாத்த தான் நம்முன்னாடி இருந்தவங்க எப்படி வாழ்ந்துருக்காங்கனு நமக்கு தெரியவரும். கீழடியில இப்போ நெறய பழம்பெரும் பொருள்கள் கிடைச்சிருக்கு இதையெல்லாம் பத்திரமா பாதுகாத்து வச்சாதான் நம் மரபும் பெருமையும் நமக்குத் தெரியவரும். அதற்கு அரசு இன்னும் கொஞ்சம் உதவி புரிஞ்சால் நல்ல இருக்கும். இளைஞர்கள் செல்ஃபோன்லேயே பொழுத போக்கிடுறாங்க. நீங்கதான் இதையெல்லாம் முக்கியமா தெரிஞ்சுக்கணும் இல்லைனா நம்ம வரலாற நம்மக்கிட்டயே தப்பா சொல்லுவாங்க. இப்போ மொழித்திணிப்பை தடுக்குறதுக்கும் இது உதவும்” என்றார்.

 

பழமைகள்தான் நம் நம் மொழியின் தொன்மைக்குச் சான்று.