உணவே மருந்து. நாம் என்ன உண்கிறோமோ அது நேரடியாக நம் உடலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் ஆரோக்கியமான உணவைத் தேடி உண்ண வேண்டும். அதிக கலோரி, ட்ரான்ஸ் ஃபேட், அடிட்டிவிஸ் நிறைந்த உணவுகள் உடலுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கக் கூடியவை. அந்த வகையில் நாம் நம் டயட் சார்ட்டில் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய 6 உணவுகளைப் பற்றிக் காண்போம்.


ரீஃபைண்ட் ஆயில்:


ரீஃபைண்ட் ஆயில், மார்கரைன் ஆயில் என்றெல்லாம் விற்கப்படும் எண்ணெய் ஜீரோ ஊட்டச்சத்து தன்மையுடையவை. இவற்றில் ட்ரான்ஸ் மற்றும் அன்சேச்சுரேடட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இவை இன்சுலின் அளவை மாற்றுவதோடு, லிபிட் ப்ரொஃபைலையும் மோசமாக்கும். இதைப் பயன்படுத்துவதால் நமக்கு ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன், புற்றுநோய் போன்றவை வர வாய்ப்புள்ளது. ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் எனப்படுவது இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை, அதன் கொழகொழப்புத் தன்மையை, தேவையான கொழுப்புச்சத்தை நீக்குவதே. அதனால் ரீஃபைண்ட் ஆயிலை தவிர்ப்பது நல்லது.


பேக் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்:


நொறுக்குத் தீனி இது முன்பெல்லாம் குழந்தைகளின் விருப்பமாக மட்டுமே இருந்த நிலையில் சர்வதேச பிராண்ட்கள் பல வயதுக்கேற்ப டார்கெட் நுகர்வோர் வைத்து இது சர்க்கரை வியாதியாளர்களுக்கான டயட்டரி ஃபைபர்ஸ் கொண்டது, இது பெண்களுக்கானது, இது ஆஃபீஸ் நேரத்தில் கொரிக்கக் கூடியது, இது மிட்நைட் ஸ்நாக்கிங்குக்கானது என்று விதவிதமாக பேக்கேஜ்டு ஸ்நாக்ஸ், குவிக் பைட்ஸ் விற்பனை செய்கிறது. இதில் ரீஃபைண்ட் மாவு, சர்க்கரை, ரீஃபைண்ட் ஆயிலே பிரதான பொருட்கள். அதேபோல் ஐஸ்க்ரீமிலும் பதப்படுத்தப்பட்ட ரீஃபைண்ட் ஆயில் மற்றும் சர்க்கரை உள்ளது.


பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள்:


பேக்கன், சாசேஜஸ், ஹேம், சலாமி, ஹாட் டாக்ஸ் எல்லாம் இப்போது இந்திய உணவுச் சந்தையிலும் சர்வ சாதாரண பொருளாக இருக்கின்றது. இவற்றை சோடியம் நைட்ரேட் மற்றும் நைட்ரைட் கொண்டே பதப்படுத்துகின்றனர். இவை கான்சர் உண்டாக்கும் காரணிகள் கொண்டவை. ஆகையால் இவற்றை தொடர்ச்சியாக உண்ணும் போது நம் உடலுக்குள் கான்சர் செல்கள் உருவாவதை நாமே ஊக்குவிக்கிறோம். கூடவே சர்க்கரை நோய், இதய நோய், தைராய்டு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற லைஃப்ஸ்டைல் நோய்களும் நம்மை நோக்கி அணிவகுக்கும்.


வெள்ளை சர்க்கரை:


உலக அளவில்  சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்கள் முதல் இடம் பிடித்திருக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை சொல்கிறது. அதனால் சர்க்கரை அளவை முடிந்தவரை குறைப்பது சரியானது உணவின் மூலம் கிடைக்கும் புரதமும், கார்போ ஹைட்ரேட்டும் தான் நாம் செயல்படுவதற்கு தேவையான ஆற்றலை தருகின்றன. ஆனால் இன்றைய நமது உணவு பழக்க வழக்கங்களால்இவை அளவுக்கு மீறி உடலுக்கு கிடைத்து விடுகிறது. அதிலும் செயற்கை இனிப்பும் அதிக தேவையற்ற கலோரிகளும் இணைந்த சர்க்கரை அதிகமாக உடலில் சேரும்போது  கெட்ட கொழுப்பாக மாறி உடல் பருமனை ஏற்படுத்துவதோடு கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவையும் குறைக்கிறது. அதனால்  இரத்தத்தில் சர்க்கரைஅளவு அதிகரித்து நீரிழிவு நோயை உண்டாக்கிவிடும். வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக தேன், வெல்லம், அத்திப்பழம், ப்ரூன்ஸ், பேரீச்சம்பழம், ஏப்ரிகாட்ஸ் ஆகியனவற்றை பயன்படுத்தலாம்.


சேச்சுரேட்டட் கொழுப்புகள்


பொதுவாகவே நிறைய பிஸ்கட்கள், கேக்குகள், பேஸ்ட்ரிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், கமர்ஷியல் பர்கர்ஸ், பீட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பிற சுவையான தின்பண்டங்களில் நிறைவுற்ற கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) உள்ளன. இவை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடாமல் கட்டுப்படுத்துவது நல்லது. நாள்பட்ட நோயின் அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க விரும்பும் ஒருவர் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை சேர்த்து கொள்வதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உலர்கொட்டைகள், அவாகாடோ, மீன் போன்றவற்றில் இருந்து ஆரோக்கியமான கொழுப்பை தேர்ந்தெடுக் கொள்ளவும்.


ரீஃபைண்ட் மாவு வகைகள்..
 
ரீஃபைண்ட் ஃப்ளார் அல்லது மைதாவில் நார்ச்சத்து என்பது பெயருக்குக் கூட இருக்காது. இது அதிக க்ளைசிமிக் இண்டக்ஸ் கொண்டது. அதனால் மைதா பதார்த்தங்களை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு எகிறக்கூடும். இது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் பிரச்சனைகள், வளர்சிதை மாற்ற உபாதைகள், இதய நோய்கள் ஆகியனவற்றிற்கு வழிவகுக்கும். அதனால் வெள்ளை பிரெட், பாஸ்தா, பேக்கரி வகைகளுக்குப் பதில் முழு கோதுமை பிரெட், பாஸ்தா, ஓட்ஸ், சிறுதானியங்கள் ஆகியனவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.