தேவையான பொருட்கள்


முட்டை - 4 


பால் - 250 மிலி


சர்க்கரை - அரை கப்


வெண்ணிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்


ஏலக்காய் தூள்- சிறிதளவு


செய்முறை


ஒரு மிக்ஸிங் பவுலில் 4 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். இதனுடன் அரை கப் சர்க்கரை. அரை டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் அல்லது, சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும். இதை சேர்த்தால் முட்டையின் வாசம் வீசாமல் இருக்கும். மேலும் ஃப்ளேவர் கொடுக்கும்.


இப்போது இது அனைத்தையும் நன்றாக அடித்து கலக்கிவிட வேண்டும். 250 மிலி பாலை இதனுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கி கொள்ளவும். இப்போது இந்த கலவை பிடிக்கும் கொள்ளளவு கொண்ட ஒரு சில்வர் பவுலை எடுத்துக் கொள்ளவும். இந்த பாத்திரத்தில் உள்பக்கம் முழுவதும் நெய்யை அப்ளை செய்து கொள்ளவும். நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை இந்த பவுலில் சேர்க்க வேண்டும். ஒரு அலுமினியம் ஃபாயில் ஷீட் கொண்டு இந்த கிண்ணத்தை மூட வேண்டும்.  இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இட்லி வேக வைக்க இட்லி பாத்திரத்தில் வைக்கும் அளவு தண்ணீரை வைக்க வேண்டும்.


இதன் மீது ஒரு ஸ்டாண்டு வைத்து. நாம் தயாரித்து வைத்துள்ள பவுலை எடுத்து ஸ்டாண்டு மீது வைக்க வேண்டும். இப்போது கடாயை ஒரு மூடி கொண்டு மூடி விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து 40 நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது மூடியை திறந்து விட்டு, ஃபாயில் ஷீட்டையும் எடுத்து விட்டு, நாம் இட்லியை வெந்து விட்டதா என பரிசோதிப்பது போல், ஒரு கத்தியை புட்டிங்கினுள் விட்டு பார்க்க வேண்டும். கத்தியில் எதுவும் ஒட்டாமல் இருந்தால் புட்டிங் வெந்து விட்டது என்று அர்த்தம். இப்போது இந்த புட்டிங்கை நன்றாக ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.


அப்படி செய்தால் ஜில்லென்று சாப்பிட நன்றாக இருக்கும்.  ஃரீசரில் வைக்க கூடாது. மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் போதுமானது. இப்போது  இதை ஒரு தட்டுக்கு மாற்றி விட்டு, உங்களுக்கு வேண்டிய வடிவங்களில் இதை கத்தி கொண்டு வெட்டி எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்காமலும் இதை சாப்பிடலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.