உப்புமா என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் பிடிக்காதில்லை. வீட்டில் சேமியா, ரவா உப்புமா என்றாலே அன்றைய தினம் அவ்வளவுதான் காலி. ஆனால், உப்புமா பிடிக்காதவர்களுக்கும் ‘அவல் உப்புமா’ பிடித்துபோகும் வாய்ப்புகள் அதிகம். மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களின் பிரபலமான உணவு இது. காலை உணவு, மாலை அவல் உப்புமா உடன் டீ. இதை ‘போஹா’ என்று அழைப்பர். இதை பல வகைகளில் செய்து ருசிக்கலாம். கொத்தமல்லி, பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு ஆகியவைகள் சேர்த்து செய்யும் அவல் உப்புமா ரொம்பவே சுவையாக இருக்கும். எப்படி செய்வது என்பதை இக்கட்டுரையில் காணலாம். 

 

பட்டாணி அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: 

அவல் - 1 கப்

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது )

வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்

வேகவைத்த உருளைக் கிழங்கு - 2 

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - தேவையான அளவு (எலுமிச்சை பழம் தேவையில்லையெனில் சேர்க்க வேண்டாம்.)

செய்முறை: 

  •  அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அவலை பாலிலும் ஊற வைக்கலாம். சுவையாக இருக்கும்.
  • சிறிது நேரம் கழித்து அவலை வடிக்கட்டவும்.
  • கொத்தமல்லியை பச்சை மிளகாயுடன் சேர்த்தி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கொள்ளவும். அதனுடன்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதோடு கொத்தமல்லி விழுதைச் சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். 
  • நன்றாக வதங்கிய பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக் கிழங்கை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்,  அவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். 
  • பிறகு, கொத்தமல்லி இலைகள் மேலே தூவி இறக்கவும். 
  • சுவை கொத்தமல்லி, பட்டாணி அவல் ரெடி!

ஒரிஜினல் அவல் உப்புமாவிற்கு  அவல் மேலே குறிப்பிட்ட பொருட்களுடன், வறுத்த நிலக்கடலை சேர்த்து செய்தால் அவ்வளவுதான்.

அவல்  மிக எளிமையாக  செரிமானம் ஆக கூடிய குறைந்த கலோரி அதிக நார்சத்து கொண்ட  உணவு.இது எடுத்து கொள்வதால், உடல்  எடை அதிகமாகாமல்  இருக்கும். உடல் எடை குறைப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.  மேலும் நீரிழிவு நோயாளிகள் இதை ஒரு காலை அல்லது இரவு உணவில் சேர்த்து கொள்ளலாம். 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். எப்போதும், இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்து போய் இருப்பவர்களுக்கு இந்த அவல் உணவு சிறந்த மாற்றாக இருக்கும். அவல் உப்புமா, அவல் பாயசம், அவல் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அவல் லட்டு, அவல் புட்டு போன்றவை கொடுக்கலாம். இது ஆரோக்கியமான உணவாகவும், குழந்தைகள் எடுத்து கொள்வதால், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கும்.

மிக குறைந்த நேரத்தில் சமைக்க கூடியது. மேலும், அரிசியில் இருந்து அவல் தயாரிக்கப் பட்டது. இப்போது சிவப்பு அரிசியில் இருந்து அவல் தயாரிக்கப்படுகிறது. கம்பு, சோளம், போன்ற சிறுதானியங்களில் இருந்தும் அவல் தயாரிக்கப் படுகிறது. இது அரிசியில் இருக்கும் வைட்டமின் பி சத்துகள் நிறைந்து இருக்கிறது. ஆண்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்த , க்ளுட்டன் இல்லாத உணவு. இதில் நார்சத்து, மற்றும் இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. பாலிஷ் செய்து சத்து குறைந்த வெள்ளை அரிசிக்கு இந்த அவல் சிறந்த மாற்றாக இருக்கும்.