மசாலா மிளகு குழம்பு ஆரோக்கியமானது மட்டும் அல்லாமல் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வாங்க மசாலா மிளகு குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

கொத்தமல்லிவிதை – 1 ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

வரமிளகாய் – 3

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

கட்டிப்பெருங்காயம் – 1

கசகசா – கால் ஸ்பூன்

முந்திரி – 10

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சின்ன வெங்கயாம் – 2 கைப்பிடி

தக்காளி – 2

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் – 1 ஸ்பூன்

புளிக்கரைசல் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெறும் கடாயை சூடாக்கி  கொத்தமல்லி விதை, சோம்பு, கடுகு, வெந்தயம், வரமிளகாய், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை  சேர்த்து நன்றாக வாசத்துடன், பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை ஆறவிட்டு காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து பொடி செய்துகொள்ள வேண்டும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கட்டிப்பெருங்காயமும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

கசகசாவையும், முந்திரியையும் 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் முழு சின்னவெங்காயம் கொஞ்சம் மற்றும் நறுக்கியது கொஞ்சம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள் அனைத்தும் சேர்த்து வதக்க வேண்டும். இதனையடுத்து தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் புளிக்கரைசல், தண்ணீர், தயார் செய்து வைத்துள்ள பவுடர், கசகசா, முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான  மிளகு குழம்பு தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க

NEET Suicides: நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்: கையெழுத்து இயக்கத்தால் என்ன பயன்? கடும் அரசியல் அழுத்தம் தேவை- அன்புமணி

நவம்பர் 3ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்.. தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகளுக்கு அழைப்பு!