வயிறு உப்புசம்,  வயிற்று வலி, ஆஸ்துமா, எடைகுறைப்பு முதல் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளைச் சரி செய்வதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் முதல் வீட்டு வைத்திய மருத்துவங்களில் ஒன்றுதான் ஓமம்.


 நம் முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்து உணவுப்பொருள்களும் நிச்சயம் ஏதாவது ஒரு மருத்துவக்குணம் உண்டு. அதில் முக்கியமான ஒன்றுதான் ஓமம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் வயிற்றுவலி ஏற்பட்டால் முதலில் நாம் தேர்ந்தெடுப்பது ஓம பானம்தான். ஒம விதைகள் அல்லது இலைகள் அல்லது ஓமத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பானம் எதுவாக இருந்தாலும் பல உடல் நலப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.


அப்படி என்னென்ன வியாதிகளுக்கு தீர்வு காணப்படுகிறது? வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம்.



 ஓமத்தின் மருத்துவப்பயன்கள்:


 நமக்கு உணவு செரிமானம் ஆகாமலும், வயிறு உப்புசமாக இருக்கும் சமயத்தில் உடனடியாக  ஓம திரவ பானம்தான் இதற்கு தீர்வாக அமையும்.


 ஆர்த்ரிட்டீஸ் நோயின் பொழுது ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்துவது முதல் ஆஸ்துமா, சீறுநீரக செயலிழப்பு போன்றவற்றைக் குணப்படுத்த ஓமம் உதவியாக உள்ளது.


 உடல் எடை குறைதல், பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஓமம் பயன்படுகிறது.


 குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், ஊம இலைகளை கொதிக்க வைத்து, ஓமச்சாற்றை கொடுத்து வரவேண்டும். இவ்வாறு செய்தால் இதுப்போன்ற பிரச்சனைகளை நாம் தடுக்க முடியும். பல் அரிப்பைத் தடுப்பது, சரும பாதுகாப்பு, வலி நிவாரணமாகவும் ஓமம் பயன்படுகிறது.


 இப்படி பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்டு ஓமத்தின் விதைகளை தினசரி நாம் பருகும் டீயில் கொஞ்சம் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் உடலுக்கு கூடுதல் நன்மை பயக்கும். இதோடு மட்டுமில்லாமல், ஓமத்தில் பருப்பு கூட்டில் சேர்த்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது. எனவே இனி மேல் நீங்களும் இனி மேற்கண்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக கொஞ்சம் இந்த மருந்துகளையும் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். ஆனாலும் இதனைப்பயன்படுத்துவதற்கு முன்பாக இதனால் பக்கவிளைவுகள் ஏதேனும் உள்ளதா? என்பதையும் முதலில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.



 ஓமத்தின் பக்கவிளைவுகள்:


 நமக்கு அசிடிட்டியைக்குறைக்கும் என்றாலும் கூட, அதிகப்படியாக இதனை நீங்கள் உபயோகிக்கக்கூடாது. ஏனென்றால் இதில் உள்ள ஆசிட் ரிஃப்லெக்ஸ, வாயு போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


 ஓமத்தில் தைமால் என்னும் பொருள் இருப்பதால் அளவுக்கு அதிகமாக உபயோகிக்கும் போது தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.- கர்ப்பிணிப் பெண்கள் ஓமத்தைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஒருவேளை நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பவர் என்றால் கட்டாயம் ஓமத்தை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அறுவை சிகிச்சையின்போது இது ரத்தக் கசிவை அதிகப்படுத்தும். ஆகவே, அறுவை சிகிச்சைக்கு 2 வாரங்கள் முன்பாகவே ஓமத்தை நிறுத்தி விடவேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.