நம் வீட்டில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியில் உள்ள அனைத்துமே மருந்துதான். தெரிந்தோ தெரியாமலோ நாம் பயன்படுத்தும் அந்த மருந்துகள் நமக்கு நன்மை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஸ்பைஸ் வகைகளை நாம் சற்று அரிதாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றையும் மீட்டெடுத்து அன்றாடப் பழக்கத்திற்கு கொண்டு வரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


அந்த வகையில் குடம்புளி என்ற ஒன்று உள்ளது. இதனை மலபார் புளி எனக் கூறுகின்றனர். இது பார்க்க பூசணி போல் இருக்கும் சிறிய மஞ்சள் நிற பழங்கள். செடிகளில் விளையும் புளி. பார்ப்பதற்கு பூசணிக்காய் வடிவத்தில் சிறியதாக இருக்கும். இது பழமானதும் காயவைத்து அதன் சதை பகுதியை புளிக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர் கேரள மக்கள். காயவைத்த பின்னர் இதற்கு ஒரு நல்ல நறுமணமும் கிடைக்கிறது.


இப்போது குடம்புளியின் நன்மைகளை அறிவோம்:
 
உடல் எடை குறைப்புக்கு குடம்புளி:


கொழுத்தவனுக்கு கொள்ளு என்பார்கள். கொள்ளு எப்படி உடல் எடைக் குறைப்பில் உதவுகிறதோ அதே போல் குடம்புளியும் எடைக் குறைப்பில் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. 


உடல் எடை குறைய வேண்டும் என விரும்புபவர்கள் சிறு நெல்லி அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறவைக்க வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிட்டு, பிறகு அதை குளிரவைத்து உணவுக்கு முன்பு அரை டம்ளர் வீதம் என மூன்று வேளையும் குடித்து வர எடை குறையும். ஆனால், ஆயுர்வேதமாகட்டும் இல்லை வேறு எந்த மருத்துவமும் ஆகட்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துகொள்ள வேண்டாம்.  


குடலுக்கு நன்மைகள் ஏராளம்:


பொதுவாக அல்சர் போன்ற குடல் புண் நோய் உள்ளவர்களை புளி சேர்க்க வேண்டாம் எனக் கூறுவார்கள். ஆனால் குடம்புளி எடுத்துக் கொண்டால் குடல் இயக்கம் சீராகிறது. அஜீரணக் கோளாறு அகன்று போகிறது. தினமும் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் நோய்கள் கட்டுப்படும். அமிலத்தன்மை குறையும். கோடைக்காலங்களில் இயற்கை பானமாக இவை செயல்படும். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்ளும் இயற்கை பானங்களில் குடம் புளி பானமும் ஒன்று.


மலச்சிக்கலுக்கு மருந்து:


மலச்சிக்கல் சிலரைப் பாடாய்ப்படுத்தும். அவர்களுக்கு குடம்புளி அருமருந்து. இயற்கையான மலம் இளக்கிகளில் குடம்புளியும் ஒன்று. மலச்சிக்கல் கொண்டிருந்தால் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி கூழ் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.


குடம்புளி சாறு குடித்தால் இத்தனை பலனா?


குடம்புளியை சாறாக்கி குடித்து வந்தால் நீரிழிவு நோய் வகைகளை கட்டுப்படுத்த செய்கிறது. மேலும் தீவிரமாகாமல் தடுக்கிறது. குடம்புளி சாறு குடிப்பது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.


தேவையானவை:


குடம்புளி – 1 எலுமிச்சை அளவு


செய்முறை:


முதலில் குடம்புளி யை ஒரு முறை அலசிக் கொள்ள வேண்டும். அலசிய கொடம்புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுத்த நாள் காலை அடுப்பில் 1 பாத்திரம் வைத்து அதில் 3 கப் அளவில் தண்ணீர் ஊற்றி, ஊறவைத்துள்ள குடம்புளியை தண்ணீருடன் சேர்க்க வேண்டும்.


இப்போது இதனை கொதிக்க செய்ய வேண்டும். ஒரு கொதி வந்த பிறகு, அடுப்பின் தீயினை மிதமாக வைத்து 1 கப் அளவில் வரும் வரை அடுப்பில் வைத்து பின் பாத்திரத்தை இறக்கி விட வேண்டும். மிதமான சூடாக இருக்கும் போது இதனை ஒரு கண்ணாடி க்ளாசில் ஊற்ற வேண்டும்.


நோய் எதிர்ப்பு சக்திக்கு குடம்புளி:


குடம்புளியில் இருக்கும் கார்சினோல் ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் குழந்தையின் ஊட்டச்சத்து அதிகரிக்க இவை பயன்படுத்தலாம். சருமப் பொலிவுக்கும் குடம்புளி உதவுகிறது. கேச பளபளப்பிற்கும் குடம்புளி உதவுகிறது. உதட்டு வெடிப்பு நீங்க குடம்புளி வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.