தயிர்(Curd) ஒரு மிகச்சிறந்த சத்தான உணவாகக் கருதப்படுகிறது, மேலும் நல்ல பாக்டீரியாக்களால் நிரம்பியுள்ளது. அதுமட்டுமின்றி அது நல்ல தரமான புரத உணவாக கருதப்படுகிறது. இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் பி 12 ஆகியவை உள்ளதால் சத்துக்களின் புதையலுக்குக் குறைவில்லை ஆனால் வீட்டிலேயே தயிர் உறைய வைக்க தெரியாததால் பலரும் கடை தயிரை நாடுவது உண்டு. அதைத் தவிர்க்க வீட்டிலேயே சுத்தமான கெட்டியான  தயிரை தயாரிக்க சில டிப்ஸ் இதோ உங்களுக்கு.


என்ன செய்வது?


1. பாலை நல்ல அகலமான பாத்திரத்தில் மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்.
2. 10 முதல் 15 நிமிடங்கள் வரை பாலை மிதமான சூட்டில் வைத்துக் காய்ச்சவும். அவ்வாறு காய்ச்சினால் தான் தயிர் நன்றாக கெட்டியாக வரும்.
3. பாலை அடுப்பில் இருந்து இறக்கிவைத்து அதை நன்றாக குளிரவிடுங்கள்
4. அதேவேளையில் பால் மிகவும் குளிர்ந்துவிடக் கூடாது. வெதுவெதுப்பான சூட்டில் பால் இருக்க வேண்டும்.
5. பின்னர் அந்தப் பாலை இன்னொரு அகலமான பாத்திரத்தையும் கொண்டு நுரை பொங்க ஆத்திக் கொள்ளுங்கள். இவ்வாறாக 4 முதல் 5 முறை நுரை பொங்க ஆத்திக் கொண்டால் போதும்.
6. நுரை பொங்க ஆத்துவதால் என்ன பயன் என்று கேட்டால். அதனால்தான் தயிர் நன்றாக கெட்டியாக உறையும்.
7. பின்னர் நுரை பொங்கிய பாலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கி விடுங்கள்.
8. இதை ஒரு கன்டெய்னரில் ஊற்றி உறையவிடவும்.
9. தயிர் உறை ஊற்றிய பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். அதைவிட முக்கியம் அதை அங்குமிங்கும் ஆட்டிவிடக் கூடாது.
10. இரவில் உறைய வைத்து காலையில் எடுத்தால் தயிர் பதமாக இருக்கும்.
11. உறையவைத்த தயிரை ஃப்ரிட்ஜில் சேமித்துவைத்தால் அதை வெளியே வைப்பதைவிட அதிக காலம் பயன்படுத்தலாம்.


இப்போது புரிகிறதா? உங்கள் வீட்டில் தயிர் ஏன் கெட்டியாக இல்லை என்ற காரணம். இந்த 11 ஸ்டெப்ஸையும் பின்பற்றினால் நிச்சயமாக வீட்டிலேயே ஹோட்டல் போல் கெட்டித் தயிர் கிடைக்கும்.


தயிர் எப்போது சாப்பிட வேண்டும்?


தயிர் சாப்பிடுவது தொடர்பாக பல்வேறு குழப்பங்களும் நிலவுகின்றன. தயிரை காலையில் சாப்பிடுவதா? இல்லை இரவிலா? என்ற பல குழப்பம் இருக்கும். தயிரை காலை, மதிய வேளையில் சாப்பிடுவது செரிமானத்திற்கு உகந்தது. இரவு தயிர் சாப்பிட்டால் ஜீரணம் தாமதமாகும். வெயில் காலத்தில் தயிர் சேர்ப்பது அவசியம். அது உடலுக்கு குளிர்ச்சி தரும்.


தயிர் குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஒரு சரியான உணவாகும், ஏனெனில் அதில் புரோபயாடிக் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, இது எந்த கால பருவத்தையும் பொருட்படுத்தாமல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் அதனை அறை வெப்பநிலையில் பயன்படுத்த வேண்டும், குளிரவைத்து பயன்படுத்தினால் சளி பிடிக்கும் வாய்ப்புள்ளது.


தயிர் சாப்பிட்டால் இன்னும் என்னென்ன நன்மைகள்?


B-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை தயிரில் நிறைந்துள்ளது.


தயிர் சாப்பிடுவதால் வாய் புண் குணமாகும்.


உணவில் தினமும் தயிர் சேர்த்துக் கொண்டால் உடல் சூட்டை தனிக்கும்.


அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.


செரிமான கோளாறுகள் ஏற்படாமல் இருக்கும்.


தயிரை தலைமுடிக்கு வாரத்தில் ஒரு நாள் தடவினால் பொடுகு சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.