அட அன்றாடம் தோசை, இட்லி போர் அடிக்குதுன்னு சொல்பவர்களுக்கு கேரட் தோசை, பொடி தோசை, சீஸ் தோசை என வெரைட்டி நிறைய இருக்கு. ஆனால் இன்னும் ஹெல்த்தியா ஒரு தோசை வேணும்னு நினைப்பவர்களுக்காக இந்த வல்லாரை தோசை ரெசிபியைச் சொல்கிறோம்.


அதற்கு முன்னதாக வலிமைமிக்க, வாழ்வுதரும் வல்லாரையின் மகத்துவத்தையும் பார்த்துவிடுவோம்..
வல்லாரை கீரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஞாபக சக்தி. குறிப்பாக குழந்தைகளுக்கு வாரமொருமுறை வல்லாரை கீரையை பக்குவம் செய்து சாப்பிட கொடுப்பதால் அவர்களின் மூளை செல்களின் வளர்ச்சி தூண்டப்பெற்று ஞாபகசக்தி மற்றும் சிந்தனை திறனை அதிகம் வளர்கிறது என்ற நன்மைதான் பட்டியலில் முதலில் இடம்பிடிக்கிறது.


ஆனால் நாம் நினைக்கும் நினைவாற்றாலையும் தாண்டி வல்லாரையி ஏராளமான பயன்கள் தாராளமாக இருக்கின்றன.
வல்லாரை ஒரு சிறந்த சித்த மருத்துவ மூலிகை . முற்றிய வல்லாரை இலை சூரணம் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் வலுவடையும். இந்த சூரணத்தை ஒரு வருடம் சாப்பிட்டு வந்தால் தலைமுடியில் ஏற்படும் நரைகள் மறையும்.
சளி பிரச்சனையை போக்க வல்லாரை கீரையோடு தூதுவிளை இலைகளை சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. அளவில் தினமும் சாப்பிட்டு வர சயரோகம், இருமல் சளி போன்ற சுவாச நோய்கள் முற்றிலும் குணமாகும். 
கொசுவால் வரும் யானைகால் நோய்க்கு ஆங்கில வழி மருத்துவம் செய்து கொள்ளும் அதே நேரத்தில் வல்லாரை கீரையின் இலைச்சாறும் அருந்தி வந்தால் யானைக்கால் வியாதி மற்றும் அந்நோய் பாதிப்பால் ஏற்ப்படும் விரைவாதம் நோயும் நீங்கும்.


உடல் அதிக வெப்பமடைவதால் கட்டிகள் ஏற்பட்டு புண்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுகின்றன. புண்கள், கட்டிகள் மேலே வல்லாரை கீரை பற்றிடுவதால் அவை சீக்கிரம் ஆறும்.   வல்லாரை கீரை காய்ச்சலுக்கும் நல்ல மருந்து.


இது கீரை என்பதைவிட மூலிகை கீரை என்பதால் இதை மருந்தாகப் பயன்படுத்த உரிய சித்த மருத்துவரிடன் ஆலோசனை பெறுவது நலம் பயக்கும். ஏனெனில் சில மூலிகைகளுடன் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற அளவும் இருக்கிறது.




சரி இப்போ நம்ம வல்லாரை தோசை ரெஸிபிக்கு வருவோம்..


முதலில் வல்லாரை கீரையை சுத்தம் செய்து கொள்வோம். இலைகளை ஆய்ந்து எடுத்து அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்புபோட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஒரு நிமிடத்தில் அதை வடிக்கட்டிவிட்டு ஒரு கடாயில் ஒருசில துளிகள் நல்லெண்ணய் ஊற்றி அலசி வடிகட்டிய கீரையை போட்டு வதக்கவும். 2 நிமிடங்களில் வதங்கிவிடும். சூடு ஆறியவுடன் அத்துடன் மிளகாய், இஞ்சி இது கீரையின் அளவு மாவின் அளவிற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்து எடுத்து அதை தோசையில் கலந்து கொள்ளுங்கள். தோசை மாவின் நிறமே மாறிவிடும். அந்தத் தோசையை நாம் வழக்கமாக ஊற்றுவது போல் ஊற்றி எடுத்தால் போதும். சுவையான வல்லாரை தோசை ரெடி.