தோசை பிரியர்களுக்கு பிடித்தமான பாலக் பனீர் ஊத்தாப்பம், உடுப்பி தக்காளி தோசை எப்படி செய்வது என காணலாம். பனீர், பாலக்கீரை, தக்காளி என ஆரோக்கியத்துடன் ருசியான ஊத்தாப்பத்தை காலை உணவாகவும் சாப்பிடலாம். 

உடுப்பி தக்காளி தோசை 

என்னென்ன தேவை?

இட்லி பச்சரிசி - ஒரு கப்

தக்காளி - 3 

கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

சிகப்பு மிளகாய் - 2 (தேவையான அளவு)

சீரகம் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

கொத்தமல்லி - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசி ஒரு கப், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊர வைக்கவும். கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸி ஜாரில் அரிசி, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக தோசை மாவு போன்று அரைக்கவும். தக்காளி, உப்பு இரண்டையும் நைஸாக அரைத்து அரிசி மாவுடன் சேர்க்கவும். நன்றாக கலந்து கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்க்கவும். அவ்வளவுதான். மாவு தயார். 

அடுப்பில் தோசை கல்லை மிதமான தீயில் வைக்கவும். அதில், நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசை ஊற்றவும். இரண்டு புறமும் பொன்னிறமாகியதும் தோசை ரெடி. இதை  தேங்காய் சட்னி, கார சட்னி  உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். 

பாலக் பனீர் ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை  - ஒரு கப்

ரவா - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

பனீர் துருவியது - ஒரு கப்

வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப்

தக்காளி பொடியாக நறுக்கியது - ஒரு கப்

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - ஒரு கப்

கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ரவா, தயிர், உப்பு, அரைத்த பாலக்கீரை  எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். ஒரு 20 நிமிடங்கள் ஊறட்டும். இதில் மாதுளை போன்ற பழங்களை விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.  தோசை ஃபில்லிங்கிற்கு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய பனீர் அனைத்தையும் நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

பின்னர், தோசை கல்லில் மாவை ஊத்தி தோசை வார்க்க வேண்டும். அதன்மீது பழ கலவை, துருவிய பனீர் ஆகிவயவற்றை சேர்த்து நன்கு வேக விடவும். அவ்ளோதான். சுவையான பாலக்கீரை பனீர் ஊத்தாப்பம் ரெடி.