கீரைகளில் பல சத்துக்கள் நிறைந்தாலும் குழந்தைகள் இதனைச் சாப்பிட விரும்பமாட்டார்கள். எனவே அவர்களுக்கு ஏற்றவாறு ருசியான மற்றும் மொறு மொறு கீரை பக்கோடோ செய்து தரலாம்.


நாம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப்பொருள்களையும் பெற வேண்டும் என்றால் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்கறிகள் மற்றும் பருப்புகளைச்சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். குறிப்பாக நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு கீரைகள் சாப்பிட்ட வேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள். அரைக்கீரை, சிறுகீரை,மணத்தக்காளி, வல்லறை, பொன்னான்கன்னி என கீரைகளில் பல வகை இருந்தாலும் அனைத்தும் மக்களுக்கு நன்மை தரக்கூடியதாகவே அமைகிறது. குறிப்பாக கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியைத் தூண்டும் திறன் பெற்றது.



இதோடு பித்தக்கோளாறுகளால் ஏற்படும் தலைசுற்று வாந்தி போன்றவற்றையும் குணப்படுத்த உதவும். இதோடு கண்பார்வை பிரச்சனை ஏற்படாமல் இருக்க, இதயம், மூளை  வலுப்பெறவும் கீரை உதவுகிறது. மேலும் இருமண், தொண்டைப்புண் போன்றவற்றையும் அரைக்கீரை குணப்படுத்துகிறது. இவ்வாறு பல மருத்துவக்குணங்கள் நிறைந்திருந்தாலும் கீரை சாப்பிட வேண்டும் என்று சொன்னாலே நம் நம்முடைய குழந்தைகள் சிலர் அலறி அடித்துத்தான் ஓடுவார்கள். இதுபோன்று உங்களது குழந்தைகளையும் உள்ளதா? கவலை வேண்டாம் கீரைய அவங்களுக்குப் பிடித்த  டேஸ்டியான பக்கோடாவாகவும் செய்து கொடுக்கலாம். இன்று அரைக்கீரை பக்கோடா எப்படி  செய்வதுன்னு இங்க தெரிஞ்சுக்கோங்க…


அரைக்கீரை பக்கோடா செய்யும் முறை:


தேவையான பொருள்கள்:


அரைக்கீரை – ஒரு கட்டு


பெரிய வெங்காயம்


பச்சை மிளகாய்


கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை


மிளகாய் தூள், சீரகத்தூள்



தேவையான அளவு உப்பு.


முதலில் ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அரைக்கீரையை பொடி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.


2 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாள், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் அல்லது டால்டாவை உருக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.


இதனையடுத்து அகன்ற பாத்திரத்தை எடுத்து 300 கிராம் கடலை மாவு மற்றும் 100 கிராம் அரிசி மாவை சேர்த்து பிசைய வேண்டும். இதனுடன் சிறிதளவு மிளகாய் தூள், சீரகத்தூள் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் அரைக்கீரை,வெங்காயம, மிளகாய், கொத்தமல்லி இலை,கறிவேப்பிலை இலை போன்ற அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்துக்கொள்ள வேண்டும். இப்போது பக்கோடாவிற்கான மசாலா தயாராகிவிட்டது.


பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் வழக்கம் போல் பக்கோடா போடுவது போன்று வாணலில் போட்டு எடுக்க வேண்டும்.


தீயை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக வரும் வரை பொறிக்க வேண்டும். இப்போது கிரிஸ்பியான மற்றும் சத்தான அரைக்கீரை பக்கோடா தயாராகிவிட்டது.