இட்லியைப் போன்ற சுவையான ஆரோக்கியமான உணவு இல்லை என்று அடித்தே சொல்லலாம்.வட இந்தியாவை பொறுத்தவரை, கோதுமை சப்பாத்தி அல்லது மைதா ரொட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று, தென்னிந்தியாவில் இட்லி, சட்னி மற்றும் சாம்பார், மிகவும் முக்கியமான, தவிர்க்க முடியாத ஒரு உணவுப் பொருளாகும்.


இட்லி:


வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷனும் ஏற்றுக்கொண்ட ஆரோக்கியமான உணவு இட்லி என்பது இங்கே குறிப்பிட வேண்டும். ஏனெனில் உளுந்தின் புரோட்டினும், அரிசியின் கார்போஹைட்ரேட்டும், இணைந்து கிடைப்பதால், இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆகச்சிறந்த ஒரு உணவாக இருக்கிறது. மறுபுறம் சுவை பிரியர்களுக்கு, அதிலும் தென்னிந்தியவாசிகளுக்கு, இட்டலி சாம்பார் என்பதின் மீதான காதல் என்றும் தீராமல் இருக்கிறது.




இத்தகைய இட்லி காதலர்களுக்காக சில சூப்பரான இட்லி ரெசிபி இதோ...



காஞ்சிபுரம் இட்லி


தேவையானவை:


 புழுங்கலரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம் பருப்பு - ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.


தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி -ஒரு துண்டு


செய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்குகழுவி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்துபொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்து அதோடு சேருங்கள். இஞ்சியை துருவிச் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, வேகவைத்தெடுங்கள். இதனுடன் காரம் புளிப்பு மிக்க சட்னி, சாம்பாருடன் சாப்பிடுங்கள்.




அவல் இட்லி:


தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப்,கெட்டி அவல் - அரை கப், உப்பு - தேவையான அளவு, ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை.


 செய்முறை: அரிசியையும் உளுந்தையும் சேர்த்தும், அவலைத் தனியாகவும் ஊறவையுங்கள். அரைக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, 6 முதல் 8மணி நேரம் புளிக்கவையுங்கள்.  புளித்த மாவில் இட்லிகளாக ஊற்றுங்கள். இதற்கு கடலை சட்னி, சாம்பார், வெங்காய சட்னி என வகை வகையாக எந்த சட்னி என்றாலும் ஏற்றதுதான்


ரவை இட்லி:


தேவையானவை:
ரவை - ஒரு கப், சற்று புளித்த தயிர் - ஒரு கப், தேங்காய் துருவல் - 2டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், ஆப்ப சோடா - சிட்டிகை, உப்பு - தேவையானஅளவு, நெய் - 2 டீஸ்பூன்.


தாளிக்க: மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு- ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு,கறிவேப்பிலை - சிறிது, முந்திரிப்பருப்பு - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன்.


 செய்முறை: ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். பின்பு மற்ற பொருட்களையும் அதனுடன் சேர்த்து (தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து)இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி,வேகவைத்தெடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள். ரவா இட்லி ரெடி!


ஓட்ஸ் இட்லி:


தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.


செய்முறை:


உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி மிளகாய் சேர்த்து நன்குஅரைத்துக்கொள்ளுங்கள். ஓட்ஸை 10 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு, உளுந்து மாவுடன் கலந்து 5முதல் 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி எடுங்கள்.


காரமான தேங்காய் அல்லது தக்காளி சட்னி, சாம்பாருடன் அருமையாக இருக்கும்.


கோதுமை ரவை இட்லி:


தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தை நன்கு அரைத்து,வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள். உப்புசேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி. சாம்பார் உடன் சாப்பிட்டால் சுவை சிறப்பாக இருக்கும்