புடலங்காய், பீர்க்கங்காய் வரிசைகளில், வெள்ளரிக்காய், நீர்ச்சத்து மிக்க நீர்க்காய்கறிகளில் முதன்மையானது. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி என்றும் சொல்லலாம். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும், சருமப் பொலிவுக்கும் கூட வெள்ளரிக்காய் பெரிதும் உதவும். 


ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.


வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்லது. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

 

வெள்ளரி பச்சடி செய்முறை:

 

கால் கப் தேங்காய், கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் கடுகு, ஒரு பச்சைமிளகாயப் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

 

கொஞ்சம் நீரை ஊற்றி, பேஸ்ட் போல குழைந்ததும் எடுத்துக்கொள்ளவும்.

 

ஒரு கப் நறுக்கிய வெள்ளரிக்காயை, வாணலி கால் பகுதி நீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.

 

5-6 நிமிடங்களுக்கு வெள்ளரிக்காய் மிருதுவாக வெந்து வந்ததும், அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.

 

நன்றாக கிளறி பரிமாறவும். தயிர் சேர்த்தும், தயிர் சேர்க்காமலும் இதைப் பரிமாறலாம்.

 

வெள்ளரிப் பச்சடியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் குடல் நலனுக்கு மட்டுமல்ல, முகப்பொலிவுக்கு மிகவும் முக்கியமானதாகும்