தேநீர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, தேயிலையை  கொதிக்கும் நீரில் இட்டு,பின்பு அதில் தேவையான அளவு பாலை சேர்த்து, சிறிதளவு சர்க்கரையை சேர்த்து சாப்பிடுவது என்பதாகும்.இன்னும் சிலருக்கு, மணிக்கு ஒரு தேநீர் என்று,ஒரு நாளைக்கு ஐந்து கப் தேநீரை குடித்து விடுவார்கள்,சிலருக்கு தேநீர் குடிக்காமல் இருந்தால்,அன்றைய தினம் முழுமை அடையாது என்பதை போல் இருக்கும்.சிலருக்கு  காலையில் தேநீர் குடிக்காமல் காலைக்கடன்களை செய்யவே முடியாது என்ற அளவிற்கு,தேநீருக்கு  அடிமைப்பட்டு கிடப்பார்கள். இவ்வாறு தேநீரானது நமது வாழ்க்கையில் நீக்கமற நிறைந்து கிடக்கிறது.


இப்படிப்பட்ட தேநீரானது, இலை வடிவில்,எவ்வித இரசாயன கலப்பும் இல்லாமல் இருக்கும்போது,சிறந்த பானமாக விளங்குகிறது.ஆனால் நிறைய இடங்களில்,இந்த தேநீரில் நிறமிகள்,நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கான வேதிப்பொருட்கள் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் என,நிறைய  பொருட்களை சேர்த்து,நமது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஆகவே தேயிலைக்கு மாற்றாக நிறைய மூலிகை தேநீர் நம் மரபு வழியில் கிடைக்கின்றன.


வெங்காய தேநீர்,ஆவாரம்பூ தேநீர்,கெமோமில் பூ தேநீர்,செம்பருத்தி பூ தேநீர்,புதினா இஞ்சி தேநீர்,சுக்கு மல்லி காபி மற்றும் அதிமதுரம் லவங்க தேநீர் என நிறைய வகைகளில், நம் பாரம்பரியத்தில் இருக்கின்ற தேநீர்களை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்.


வெங்காயத் தேநீர்:


ஒரு டம்ளர் நீரை நன்றாக கொதிக்க விட்டு, ஒரு வெங்காயத்தை நன்றாக நறுக்கி அதில் போடவும்.பின்னர் பெருஞ்சீரகத்தூளை ஒரு சிட்டிகை சேர்க்கவும்.லவங்கத்தை  நன்றாக பொடி செய்து அதில் சேர்த்து, 20 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் இதை வடிகட்டி,இந்த நீரில் தேவையான அளவு தேனை சேர்த்து, குடிக்க,சுவையான வெங்காயத் தேநீர் தயாராகிவிடும்.வறட்டு இருமல் மற்றும் சளிக்கு இந்த தேநீர் ஆகச்சிறப்பான ஒரு மருந்தாகும்.


ஆவாரம் பூ தேநீர்:


பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் குழந்தையின்மை பிரச்சனைகள் ஆகியவற்றை சரி செய்யும் தன்மை இந்த ஆவாரம்பூவிற்கு உண்டு.  சர்க்கரை நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் இந்த ஆவாரம்பூவிற்கு இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் சரும பொலிவு தோல் வறட்சி ஆகியவற்றை போக்கும் தன்மையும் ,உடலுக்கு குளிர்ச்சியை தரும் தன்மையும் இந்த ஆவாரம் பூவிற்கு உண்டு ஆகியால் இத்தகைய நன்மைகள் நிறைந்த ஆவாரம்பூ தேநீரை எவ்வாறு தயாரிப்பது என்பதை காணலாம். ஒரு கிளாஸ் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் கைப்பிடி அளவு ஆவாரம் பூவை சேர்த்து கொதிக்க விடவும் 20 நிமிடங்களுக்கு கழித்து இந்த தண்ணீரில் தேவையான அளவுக்கு தேன் சேர்த்து பருக வேண்டும்.


 கெமோமில் பூ தேநீர்:


மூலிகை செடி வகையைச் சார்ந்த இந்தப் பூவின் இதழைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதன் மூலம் உடல் குளிர்ச்சி, தொண்டை வலி, சளி பிரச்சனைகள் மற்றும் ஜுரம் ஆகியவை குணமாகிறது. ஒரு கிளாஸ் கொதிக்கும் தண்ணீரில் அரைப்படி அளவிற்கு இந்த பூவை இட்டு அதனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விடவும் பின்னர் இந்த தேநீரை வடிகட்டி அதில் தேவையான அளவு தேன் சேர்த்து பருகவும்


செம்பருத்தி பூ தேநீர்:


செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கரு உருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து என கருதப்படுகிறது


செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும்.


செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
நன்றாக கொதிக்கும் நீரில், நான்கைந்து செம்பருத்தி பூக்களை போட்டு,பத்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க வைத்து,வடிகட்டி, தேவையான அளவு தேன் கலந்து, இந்த தேநீரை தயாரித்து குடிக்கலாம்.


இதே முறையில் இஞ்சி புதினா தேநீர், லவங்கம் அதிமதுரம் தேநீர் மற்றும் சுக்கு மல்லி தேநீர் ஆகியவற்றை தயாரித்து குடிப்பதன் மூலம்,உடலில் இருக்கும் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு, நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.