ஆடி மாதம் அம்மனுக்குரியது என்பதே அதன் தனிச்சிறப்பு. ஆன்மீகரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். பெரும்பாலானோர் ஆடி மாதத்தில் வீடுகளில் அம்மன் வழிபாடு நடத்துவர். ஆடி மாதத்தில் நிறைய சிறப்பு நாட்கள் இருந்தாலும் ஆடிப்பூரம் முக்கியத்துவம் வாய்ந்தது.


ஆடிப்பூரம் நாளில் அக்கார அடிசல் செய்து அம்மனை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.


ஆடிப்பூரம் வழிபாடு:


ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் சக்தியாகிய சொல்லப்படுகிற உமாதேவி அவதரித்ததாக சிவபுராணம் தெரிவிக்கிறது. இதே நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் பூமாதேவியே ஆண்டாளாக அவதரித்தார் என்று புராணங்களில் கதை சொல்கிறது.


ஆடிப்பூர நாளில் சைவ மற்றும் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய நாள் என்று சொல்லப்படுகிறது.


ஆடிப்பூரத்தன்று அம்மனை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்; ஆடிப்பூர தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வணங்கினால் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. குழந்தை பேறு உள்ளிட்ட பாக்கியமும் கிட்டும். அதோடு, ஆடிப்பூரம் நாளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. 


கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்லப்படுகிறது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். மகாவிஷ்ணுவின் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மீது கொண்ட பக்தியால் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை இன்றைக்கும் வைணவ தலங்களில் பாடப்படுகிறது. அதில் நாச்சியார் திருமொழியில் பாசுரத்தில் அக்கார அடிசல் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்.


’நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்


நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து


 பராவி வைத்தேன்


 நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் 


ஏறு திருவுடையான் இன்று வந்து இவை 


கொள்ளுங் கொலோ!' 


ஆண்டாளின் பிரார்த்தனை செய்யும்போது வெண்ணெய், அக்கார அடிசலும் சமர்ப்பிப்பதக வேண்டுகிறாள். 


அக்கார அடிசல் செய்து ஆண்டாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் அக்கார அடிசல் பிரசாதமாக வழங்கப்படும். ஊறவைத்த அரிசியை பாலில் வேக வைத்து அதில் முந்திரி, பாதாம், ஏலக்காய் குங்குமப்பூ ஆகியவை சேர்த்து செய்துவிடலாம் அக்கார அடிசல்.


என்னென்ன தேவை?


தேவையான பொருட்கள்


பச்சரிசி – 1 கப்


பாசிப்பருப்பு – அரை கப்


பால் – 1 ½ லிட்டர்


வெல்லம் – 2 ½ கப் –


நெய் – அரை கப்


முந்திரி பருப்பு – ஒரு கப் (முந்திரி பருப்பு நிறைய சேர்க்கலாம்)


காய்ந்த திராட்சை – ஒரு கப்


ஏலக்காய் – 3


கிராம்பு – 1


குங்குமப்பூ - சிறிதளவு


செய்முறை:


இதற்கு அரிசியை 10 நிமிடங்கள் ஊறை வைக்கலாம். பிறகு, அடுப்பில் மிதனமான தீயில் வாணலியில் நெய் சேர்த்து அதில் பாசிப்பருப்பு நன்கு பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும். அடுத்து பச்சரியை பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அதோடு, அதனுடன் பால் சேர்க்கவும். மிதமான தீயில் அரிசி, பருப்பு இரண்டும் பாலில் நன்றாக வேக வைக்கவும். அரிசி, பருப்பு மசிந்து வரும் வரை வேக வைக்கவும். 


இதற்கு தேவையான வெல்ல பாகு  தனியே காய்ச்சி வைக்கவும். பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஓரளவு கொதித்ததும் தனியே எடுத்து வைக்கவும்.


அரிசி பருப்பு குழைந்த பின்னர்,  வெல்ல பாகை வடிகட்டி அதோடு கொட்டி நன்றாக கலக்கவும். மிதமான தீயில் 3 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும். 


இப்போது இதற்கு முந்திரி தாளிக்க, அடுப்பில் பாத்திரத்தில் நெய் சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்கவும். அதனுடன் காய்ந்த திராட்சையை வறுத்து எடுக்கவும். இதை அக்கார அடிசல் உடன் சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பாத்திரத்தின் அடிப் பிடிக்காமல் இருக்கும் அளவுக்கு கிளறவும்.  பின்னர் 3 ஏலக்காய் அல்லது 3 கிராம் லேசாக இடித்து சேர்க்கவும். அரிசி, பருப்பு நன்றாக குழைந்து இருப்பது தெரிந்தால் அவ்வளவுதான். குங்குமப்பூ சேர்த்தால் தித்திப்பான அக்கார அடிசல் தயார்.