தயிர் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம் என சாதங்களுக்கு சிறந்த சைடிஷ் மட்டுமல்ல பல நேரங்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுப் பண்டமாகவும் உள்ளவை அப்பளங்கள்.. அதுவும் கலர் கலரான அப்பளங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.. விலங்குகள், நட்சத்திரங்கள் என விதவிதமான வடிவங்கள், A,B,C,... என நீளும் பட்டியலில் சேரும் இந்த அப்பளங்கள் ஆபத்தானவை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது உணவு பாதுகாப்புத்துறை.

 

காரணம் அப்பளங்களில் சேர்க்கப்படும் அதிகபடியான நிறமிகள் தான்.நிறம் சேர்க்கப்பட்ட அப்பளங்களால் வயிற்றுபுண், புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ள உணவு பாதுகாப்புத்துறை, அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

 

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட  செய்திக்குறிப்பில் 'பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்கொள்ளும் நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வரப் பெற்றுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள், 2011-ன் படி குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்படி குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் Carmoisine, Tartrazine, Sunset yellow, Ponceau 4R உள்ளிட்ட பல நிறமிகள் (DYES) சேர்க்கப்படுகின்றன. இவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும், அனுமதிக்கப்படாத நிறமிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், தரமற்ற, நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுபுண், புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 




 

குடல் அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வடகம் , வத்தல் தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் (2006) மற்றும் ஒழுங்குமுறைகள்  (2011)ல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவுப்படி, அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து உணவு வணிக நிறுவனங்களும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பொழுதும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தங்களுடைய உணவு பாதுகாப்பு உரிம எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் குடல் அப்பளம், வடகம், வத்தல் பொட்டலங்களின் மீதுள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறையின் உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும்முழுமையான முகவரி, நிகர எடை, லாட் / கோடு / பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு, Nutritional Information ஆகியவை குறித்த விபரங்கள் இடம் பெற வேண்டும். எனவே, பொதுமக்கள் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விபரங்கள் உள்ளதா என பார்த்து வாங்கவேண்டும்.

 



உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகிய 434 உணவு மாதிரிகள் பாகுப்பாய்வு செய்யப்பட்டு 56 உணவு மாதிரிகள் தரமானது எனவும், 301 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது எனவும், 77 உணவு மாதிரிகள் தரம் குறைவானது மற்றும் தப்புக்குறியிடப்பட்டது எனவும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்றது என அறிக்கைபெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் (2006)ன் படி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 99 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு 14 லட்சத்து 60 ஆயிரன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

தரம் குறைவானது மற்றும் தவறான குறியிடப்பட்டது என அறிக்கை பெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது மாவட்ட நீதி வழியில் தீர்ப்பு வழங்கும் அலுவலர் (Adjudicating Officer) நீதிமன்றத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 54 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு 7 ல்ட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து விற்பனை கடைகளிலும் தொடர் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை எளிதில் கவரும் நோக்கில் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவை பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. போதிய விழிப்புணர்வின்றி இவ்வாறு நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுபுண் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.  இவை குறித்து 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் செய்யலாம் unavupugar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு மாற்று நம்மிடம் இல்லையா? என்ன? அதேதாங்க...

முன்பெல்லாம் மீதமான பழைய சாற்றை சீரகம், மிளகாய்ப்பொடி சேர்த்து வெயிலில் காய வைத்து, பொரித்து சாப்பிடுவோமே... அதேதான்...