செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றை குழந்தைகள் போலவே பாவிக்கிறார்கள். அவை அழகான ஃபர்ருடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். ஆனால் உங்கள் செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் அளிக்கும் உணவு ஆரோக்கியமானது தானா அல்லது அது தீங்கு விளைவிக்கும் ஆபத்தான உணவா என்பதை அறிந்த பிறகே கொடுப்பது அவசியம். சரியான ஊட்டச்சத்து நாய்களின் நல்வாழ்விற்கு முக்கியமான காரணமாகும். அவற்றின் வயது, எடை, பாலினம், உயிரியல் அமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்து மாறுபடும் என்கிறார் பிரபல கால்நடை மருத்துவர்.


பொதுவாகவே நாய்கள் தனக்கு என்ன உணவு கிடைக்கிறதோ அதை தேடி உண்ணும் பழக்கம் கொண்டது. அவற்றின் உணவுகளை விடவும் மனிதர்களின் உணவை உண்ணும் வாய்ப்புகள் அதிகம். அது சில நேரங்களில் அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

உங்கள் செல்லப்பிராணியின் விருப்பத்திற்கேற்ப உணவை தேர்ந்தெடுக்கலாம். அவர்களின் உணவு தேவைகளை குறித்து உங்களின் கால்நடை மருத்துவரை அணுகி தெளிவு பெறலாம்.

 




கர்ப்ப காலம் அல்லது பாலூட்டும் தாய் நாய்களுக்கு ஊட்டச்சத்து அளவில் 1.5 முதல் 3 மடங்கு வரை தேவைப்படுகிறது. இது அவர்களின் வகை, அளவை பொறுத்து மாறுபடும். பிரசவத்திற்கு பிறகு அது தொலைத்த சக்தியையும் எனர்ஜியையும் மீண்டும் பெறுவதற்காக கொழுப்புசத்து நிறைந்த சூப்பர்ஃபுட்கள் அவற்றிக்கு தேவைப்படும் என்கிறது அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சங்கம்.

நாய்குட்டிகளின் மூளை, எலும்புகள் வலுவாக வளர்ச்சி அடைய அதிகமாக புரோட்டீன், ஒமேகா 3 & 6 நிறைந்த உணவுகள் மற்றும் மீன் எண்ணெய் அவசியமானது. வளரும் நாய்குட்டிகளுக்கு 22% முதல் 32% வரை புரோட்டீன் தினசரி உணவில் தேவைப்படுகிறது.
 
நாய்குட்டிகளாக இருக்கும் போது அவற்றால் பால் பொருட்களை எளிதில் ஜீரணித்துவிட முடியும் ஆனால் வளர்ந்த நாய்களால் தயிர் தவிர மற்ற பால் பொருட்களை ஜீரணிக்க முடியாமல் வயிறு பிரச்சனை ஏற்படும்.

 




செல்ல பிராணிகளுக்கு வெங்காயம், திராட்சை, காபி, டீ, உலர்ந்த பழங்கள், இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நச்சுத்தன்மையை அதிகரிக்கும். மாற்றாக அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பு உணவுகளை தேர்ந்தெடுக்கலாம்.

நாம் உண்ணும் சாக்லேட் , பிஸ்கட்களில் இனிப்பு இருப்பதால் அவை தீங்கு விளைவிக்கும் ஆதனால் அதை தவிர்க்க வேண்டும். கோதுமையில் கிளுடன் இருப்பதால் அது நாய்களுக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும். உப்பு மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட உணவுகளை அறவே தவிர்த்தல் வேண்டும்.

உயிரியல் ரீதியாக செல்லப்பிராணிகளும் மனிதர்களும் வேறுபட்டவர்கள். அதனால் நாம் உண்ணும் உணவு அனைத்தையும் சாப்பிட இயலாது. இருப்பினும் மனிதனால் உண்ணக்கூடிய பொருட்களை வைத்து அவர்களுக்கான உணவை தயாரிக்கவேண்டும்.