இன்றைய அவசர வாழ்க்கை முறையில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரிவிகிதத்தில் உணவில் எடுத்துக்கொள்கிறோமா? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது. இருப்பினும், சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் ஆரோக்கியமான உடலுக்கு அவசியமானவை.


தண்ணீர்:


பாக்கெட்களில் அடைத்து விற்படும் உணவுகளைத் தவிர்ப்பது உடலில் நச்சு சேருவதைத் தவிர்க்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பலரும் ஆர்கானிக் உணவுகள், சிறுதானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை தினமும் டயட் லிஸ்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  அந்தந்த பருவநிலைக்கு ஏற்றார்போல  கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்.


கோடைகாலம், மழைகாலம் ஆகியவற்றிற்கு ஏற்றார்போல நம் உணவு இருக்க வேண்டும். உடலில் 70% தண்ணீரை பராமரித்தாக வேண்டும். அவ்வாறு செய்தால் உடலில் உள்ள கழிவுகள் வியர்வை மற்றும் சிறுநீராக வெளியேறிவிடும் என்று நிபுணர்கள் அறிவுத்துகின்றனர். 


உடலில் ஊட்டச்சத்துகள் அதிகரிக்க உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பழங்கள் என்னென்ன என்று நிபுணர்களின் பரிந்துரைகளை இங்கே காணலாம். குறிப்பாக, நோய் எதிர்ப்பு மணடலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஊட்டச்சத்து மிகுந்த பழங்களாக நிபுணர்கள் பரிந்துரைப்பவைகளை காணலாம்.


அன்னாசி


அன்னாசி பழத்தில் ப்ரோமெலென் என்ற ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி பண்புகளை கொண்டுள்ளது. இதனால் புதிதாக நோய் தொற்றுகளைத் தடுக்கும் சக்தி அன்னாசிக்கு உள்ளது. அன்னாசியில் வைட்டமின் ஏ,பி,சி, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கொழுப்புச்சத்தும் குறைவு; நார்ச்சத்து அதிகம். பொட்டாசியம், கால்சியம், மினரல்ஸ் உள்ளிட்டவை முக்கிய சத்துக்களும் உள்ளன.


புரதம், இரும்புச்சத்து உள்ளிட்ட உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கின்றன. இதில் நிறைய மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளன. ’அனீமியா’ என்ற ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு அன்னாசி பழ சாறு மிகவும் நல்லது. இது இயற்கையாகவே அதிக அளவு சர்க்கரையை கொண்டுள்ளதால் 
சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 


பப்பாளி


பப்பாளி அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, இ உள்ளிட்டவை அதிகமாக உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இயற்கையிலேயே கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டது.


சிட்ரஸ் சத்துமிகுந்த பழங்கள்


எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இவை சிட்ரஸ் பழங்கள் என்று அழைக்கப்படுகிறது.இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த வகை பழங்களைச் சாப்பிடலாம்.


கிவி 


கிவி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி இருக்கிறது.இதில் அதிக அளவு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. சத்தான பழங்களில் கிவிக்கு எப்போதும் டாப் இடம்தான் என்கின்றனர் நிபுணர்கள். இதில் பொட்டாசியம், வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.


மாம்பழம்


மாம்பழம் சுவையான கனி என்றாலும், இதில் வைட்டமின் ஏ,சி, உள்ளிட்ட சத்துக்கள் அதிகமுள்ளன. நார்ச்சத்து,பொட்டாசியம் உள்ளிட்டவைகள் இதில் அதிகம் உள்ளன. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இதை அளவோடு சாப்பிட்டால் எடை குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.


கொய்யா


கொய்யா பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் உள்ளிட்டவைகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளிட்டவைகள் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கின்றன. 


தர்பூசணி


கோடை காலம் என்றவுடன் ’தர்பூசணி’ பழமும் நம் நினைவுக்கு வரும் இல்லையா? தர்பூசணியில் சிட்ரூலா என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. இது நீர்ச்சத்து மிகுந்த பழம் என்பதால், உடலில் தண்ணீர் அளவை தக்கவைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.


மாதுளை 


மாதுளையில் நைட்ரிக் ஆக்சைட்-ஐ அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கும். இதில் ஏராளமான வைட்டமின்கள் இருக்கின்றன. செரிமானப் பிரச்சனைகளை சீராக்க உதவுகிறது. ஜூஸாக அருந்துவதை விட பழமாக சாப்பிடுவதே நல்லது. 


ஆப்பிள்


ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி, ஏ,நார்ச்சத்து உள்ளிட்டவைகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள பழமாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.


ஊட்டச்சத்து மிகுந்த எல்லா பழங்களையும் தினமும் டயட்டில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், எதாவது ஒரு பழத்தை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளலாம்.