பல ஆண்டுகளாக நமக்குத் தெரியாமலேயே நாம் செய்துவரும் யோகாசனம்தான் இந்த தோப்புக்கரணம். முன்பெல்லாம் பள்ளியிலோ, வீட்டிலோ தவறு செய்துவிட்டால் அதற்குத் தண்டனையாகத் தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள். இதன் அருமையை உணர்ந்த வெளிநாட்டினர் *சூப்பர் ப்ரெயின் யோகா (Super Brain Yoga)* எனும் பெயரில் இந்த தோப்புக்கரணத்தை தூக்கி கொண்டாடுகின்றனர்.

 

நாம் மற்ற உடற்பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும், இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். பல நன்மைகளை அடைய முடியும். அதனால்தான் இதனை வெளிநாடுகளில் சூப்பர் ப்ரெயின் யோகா என்றுக் குறிப்பிடுகின்றனர். இதை எப்படி செய்ய வேண்டுமென உங்களுக்கு தெரியுமா? வலுது கை மேலே வரணுமா? இடது கை மேலே வரணுமான்னு? கேட்டா யோசிக்கிறீங்கதானே?  அதத்தான் கீழ சொல்லிருக்கோம்..

 

முதல்ல நம்முடைய தோள்பட்டை அகலத்திற்குக் கால்களைப் பிரித்து வைத்து நிற்கவேண்டும். இடது கையை மடக்கி, இடது கையின் பெருவிரலால், வலது காதுமடலின் நுனியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். வலது கையை மடக்கி, வலது கையின் பெருவிரலால் இடது காது மடலின் நுனியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பிடிக்கும்போது, கட்டைவிரல் காதின் முன்புறமும், ஆள்காட்டி விரல் காதின் பின்புறமும் இருக்க வேண்டும்.

 



 

வலது கையானது, இடது கையின் மேல் இருப்பது அவசியம். இரு கால்களையும் மடக்கி, முதுகை வளைக்காமல் உட்காரும் நிலையில், தோப்புக்கரணம் போட வேண்டும். உட்காரும் நிலை நம்மால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு செய்யலாம். எழும்போது மூச்சை வெளியே விட்டபடி எழ வேண்டும். காலையில் குளிப்பதற்கு முன்பும், மாலையில் குளிப்பதற்கு முன்பும் தோப்புக்கரணம் போடுவது நல்லது.

 

இதைச் செய்யும்போது சிலநேரங்களில் கஷ்டமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும். பொதுவாக முதல் தடவை தோப்புக்கரணம் போடுபவர்கள் ஐந்துதடவை மட்டுமே செய்து பழகவேண்டும். ஆர்வமிகுதியால் முதல்நாளே அதிகமாக செய்தால் கால் தொடைப்பகுதியிலும் கால் மூட்டுக்குக் கீழே உள்ள சதைப்பகுதியிலும் பிடிப்பு உண்டாகி வலி எடுக்கும். அதனால் தோப்புக்கரணம் போடுவதை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொள்ள வேண்டும். முதலில் சிலநாட்கள் ஐந்து தோப்புக்கரணமும் இரண்டு மூன்று நாள்கள் கழித்து 10, 15 என்றும் கூட்டிக்கொள்ளலாம். ஓரளவு பழகிவிட்டால் தினமும் 15-ல் இருந்து 50 தோப்புக்கரணம் வரை போடலாம்.

 



 

தோப்புக்கரணம் போடும்போது தொடர்ந்து உட்கார்ந்து எழுந்திருப்பதால் காதின் நுனிப்பகுதியில் ஏற்படக்கூடிய அழுத்தம் நரம்புகளின் வழியாக மூளை வரை செல்லும். அப்போது மூளையில் ஏற்படும் மாற்றத்தால் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தூண்டும். அத்துடன் மந்தநிலையில் உள்ள மற்ற உடல் உறுப்புகளும் உற்சாகமாகிவிடும். இதை 5,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் அதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 



 

 

ஆட்டிசம் குறைபாடு, மன இறுக்க நோய்களுக்கும்கூட தோப்புக்கரணம் பலன்கள் தருவதாக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கர்ப்ப காலங்களிலும் தோப்புக்கரணம் போடாமல் இருப்பது நல்லது. ஆனால், மற்ற காலகட்டங்களில் பெண்கள் தோப்புக்கரணம் போட்டு வந்தால் பிரசவகாலங்களில் சிக்கல்கள் எதுவும் வராது.  இந்த தோப்புக்கரணத்தை போடுவதால் மெல்லிடையைப் பெறலாம்.

 

மருத்துவப் பயன்கள் (Medicinal uses)

 

*தூண்டல்*

தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக்கொள்கிறோம். அப்போதுதான் உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கானத் தூண்டுதல் கிடைக்கும்.

 

*சீரான ரத்த ஓட்டம் (Balanced blood flow)*

உட்கார்ந்து எழும்போது, காலில் இருக்கக்கூடிய சோலியஸ் என்னும் தசை இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

 



 

காதுகளில்தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு, கண்கள், கீழ் மற்றும் மேல் தாடை, ஈரல், காதின் நரம்பு எனப் பல்வேறு உறுப்புகளின் தொடர்புப் புள்ளிகள் அமைந்துள்ளன. எனவே தோப்புக்கரணம் போடும்போது, இந்த எல்லா உறுப்புகளுமே பயன்பெறுகின்றன.

 

*நினைவுத்திறன் (Memory)*

இதன்மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. எனவே மூளை சுறுசுறுப்பு அடைந்து நினைவுத்திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது.

 

*மன அழுத்தம் (mental stress)*

தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து போடும்போது, மன இறுக்கம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைகின்றன.

 

*எலும்பு (Bone)*

இப்பயிற்சியால் இடுப்பில் உள்ள எலும்பு, தசை, ஜவ்வு உள்ளிட்டவை வலுவடைகின்றன. இதனால் இடுப்பு வலி வராமல் தடுக்க முடியும்.

 



 

*தொப்பை குறைய (Lower the belly)*

குடல் பகுதிக்குத் தேவையான இயக்கம் கிடைப்பதால், மனிதனால் கழிவை எளிதில் வெளியேற்றிட முடியும். அதே சமயம் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், தொப்பையும் குறையும்.

 

இது மட்டுமல்ல ஆண்மைக்குறைவு உள்ளவர்கள், அதாவது விரைப்புத்தன்மை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது தொடைப்பகுதிக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும் என்பதால் ஆணுறுப்பை வலுப்படுத்தும். இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் தோப்புக்கரணத்தைப் போட்டு எல்லோரும் பலன் பெறலாம்