தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஆயுதபூஜை. இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஏனென்றால், ஆயுத பூஜையானது நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை அளிக்கும் விதமாக நாம் செய்யும் தொழிலை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது.


வீட்டைச் சுத்தம் செய்ய எளிய வழிகள்:


தமிழ்நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை வருகிறது என்றாலே முதல் நாளே வீட்டைத் தூய்மைப்படுத்தி பொருட்களை சுத்தம் செய்வது வழக்கமாக உள்ளது. வீட்டை சுத்தம் செய்வது என்பது எப்போதும் சவாலான ஒன்றாகவே அமைகிறது. வீட்டை சுத்தம் செய்யும்போது கீழே உள்ள சில வழிகளை பின்பற்றினால் மிக எளிதாக இருக்கும்.



  • வீட்டை சுத்தம் செய்யும்போது முதலில் ஒட்டடை அடிப்போம். அவ்வாறு ஒட்டடை அடிக்கும் முன்பு படுக்கை, சோபா, டிவி போன்றவற்றை துணி கொண்டு மூடிவிடவும். பாத்திரங்கள் மீது பேப்பர்களை போட்டு மூடிவிடுவது நல்லது.

  • துணிகள் வைக்கும் அலமாரிகளை சுத்தம் செய்த பிறகு அதில் பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, சந்தனப் பொடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இடவும். அதன் மீது காகிதத்தை விரித்து அதன் மேலே துணிகளை அடுக்கவும். இதனால், எப்போதும் நல்ல நறுமணம் இருந்து கொண்டே இருக்கும்.

  • வீட்டில் உள்ள சில பொருட்களை துடைப்பதற்கு ஒரு கப் தண்ணீரில் பாத்திரம் கழுவும் திரவத்தில் 2 ஸ்பூன், சமையல் சோடா 2 ஸ்பூன் நன்றாக கலந்து பயன்படுத்தலாம்.

  • வீடுகளில் நமக்கு பெரிய தொல்லையாக இருப்பது கரப்பான் பூச்சி. கரப்பான் பூச்சியின் தொல்லையில் இருந்து தப்பிக்க சமையல் அறைகளில் பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம். அதேசமயம் குழந்தைகளின் கைகளில் அது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

  • வீடுகளில் பயன்படுத்தப்படாத பாத்திரங்களை தனியாக மூடி எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டே அல்லது ஏதேனும் பெரிய பைகளிலோ போட்டு மூடி வைத்துவிட்டால் அழுக்கு படிவதை தவிர்க்கலாம்.

  • இனி பயன்படுத்தவே மாட்டோம் என்ற பொருட்களையும், துணிகளையும் வீட்டை விட்டு அப்புறப்படுத்துங்கள்

  • ஜன்னல், கதவுகளுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகளை துவைக்கும்போது அதில் சமையல் சோடாவை கொஞ்சம் சேர்த்துக் கொண்டால் அழுக்குகள் நன்றாக நீங்கும். அதேபோல, கால்மிதிகளை துவைக்கும்போதும் சமையல் சோடாவை சேர்த்துக் கொண்டால் அழுக்குகள் நன்றாகவே நீங்கும்.


இந்த வழிமுறைகளை பயன்படுத்தினால் வீட்டை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.