உடற்பயிற்சிக்கு மாற்றாக இன்று உலகம் முழுவதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது யோகாசனங்கள்.


யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம்,வரவிருக்கும் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் தவிர்க்கப்படுவதாக யோகா தெரபி ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்கள். யோகாசனத்தின் பிறப்பிடம் இந்தியா என்ற பொழுதிலும் இன்று உலகம் முழுவதும் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


மருந்தில்லா மருத்துவம் எனப்படும் ஹீலிங் மற்றும் அக்குபஞ்சர் போன்ற பல வழிகளில் யோகாசனம் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. அறுவை சிகிச்சை இல்லாத,பல உடல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு, உலகம் முழுவதிலும் இந்த யோகாசனமானது, பரிந்துரைக்கப்படுகிறது. இந்த யோகாசனங்களை முறைப்படி செய்தால் ஆகச்சிறந்த பலனையும் தருகிறது.


மன அழுத்தம், நீரிழிவை தவிர்ப்பது, உடல் ஆரோக்கியம், உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைப்பது, நுரையீரல் பிரச்சனைகள், அல்சர் பிரச்சனைகள்,மூட்டு வலி பிரச்சனைகள் மற்றும் கொழுப்பை கரைப்பது என யோகாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.


பச்சிமோத்தாசனம்:


 இந்த யோகாசனத்தை செய்வதன் மூலம்,சிறுநீரகம்,கல்லீரல் மற்றும் மண்ணீரல் நன்றாக அழுத்தப்பட்டு நீரிழிவு தவிர்க்கப்பட்டது.


இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் கணையத்திற்கு புத்துணர்வு கிடைக்கிறது.இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருவதன் மூலம், பெண்களுக்கு ஆண்களுக்குமான மலட்டுத்தன்மை நீங்கி,குழந்தை பேறு ஏதுவாகிறது.


இதேபோல் சிறுகுடல் பெருங்குடல் நன்றாக அழுத்தப்படுவதினால், நாட்பட்ட மலச்சிக்கல் நீங்கி செரிமானம் நன்றாக நடக்கிறது. நீண்ட நாட்களாக பெண்களிடம் மாதவிடாய் கோளாறுகள்,பூரணமாக குணமாகிறது. இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு வலுவடையும். இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து, திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும். மனதை ஒருமுகப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.


இத்தகைய பலன்களைத் தரும் பச்சிமோத்தாசனம் எவ்வாறு செய்வது என்பதைக் காணலாம்.


முதலில் யோகாசனம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் விரிப்பை விரித்து, அதன் மீது கால்களை நன்றாக நீட்டி,உங்கள் உடலானது L வடிவில் இருக்கும் படி முதுகை நேர் செய்து அமர்ந்து கொள்ளவும். எந்த ஒரு ஆசனம் செய்வதாக இருந்தாலும் முதலில் நாடி சுத்தி செய்வது அவசியம்.ஆகவே மூக்கின் வழியாக நன்றாக மூச்சை இழுத்து பின் மெதுவாக வெளியில் விடவும். இதைப்போல் மூன்றில் இருந்து ஐந்து எண்ணிக்கையில் செய்து முடித்த பின், வலது பக்க நாசியில், மூச்சை நன்றாக இழுத்து இடது பக்க நாசியின் வழியாக,விட்டு,விட்டு மூச்சை வெளியேற்றவும். இதேதன்மையில் இடது பக்கமும் செய்து மூச்சை சுத்தி செய்யவும்.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் இதய சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இரண்டாவதாக இருக்கும் அழுத்தி வெளியிடும் அந்த பயிற்சியை செய்யாமல்,முதலில் குறிப்பிட்ட மூச்சு பயிற்சியை மட்டும் செய்யவும்.


 உங்கள் கைகள் இரண்டையும் கீழிருந்து மேல் நோக்கி இரண்டு காதுகளை ஒட்டி கொண்டு வரவும். இப்படி செய்யும் நேரத்தில் மிகவும் பொறுமையாக மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.


பின்னர் மிகக் பொறுமையாக முன்னோக்கி வளைந்து உங்கள் பாதங்களைத் தொடவும்.இப்படி செய்யும் போது, ​​மிகவும் பொறுமையாக மூச்சை வெளிவிடவும்.பின்னர் இதே ஆசனத்தில் இருந்தபடி மூன்று எண்ணிக்கையில் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து,வெளியில் விடவும். திரும்பவும் கைகளை மேலே தூக்கி, பழைய அமைப்பிற்கு வரவும். இவ்வாறு வரும் சமயத்தில் மூச்சை மெதுவாக இழுக்கவும்.பின்னர் கைகளை தலைக்கு மேல் கீழ்நோக்கி கொண்டு வரவும்.இப்படி செய்யும் நேரத்தில் மூச்சை வெளிவிடவும்.


இவ்வாறு இந்த ஆசனத்தை ஆறு முறை தினமும் செய்து வரவும்.ஆரம்ப நாட்களில் கைகளால் பாதத்தை சிலரால் தொட முடியும், ஆனால் சிலரால் தொட இயலாது.இருப்பினும், தொடர்ச்சியாக பழக்கத்தின் மூலம் வரலாம்.இதைப் போலவே ஆரம்ப நாட்களில் அனைவராலும் கால்களின் முட்டி பகுதியில் வளைவு இல்லாமல் செய்ய முடியாது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்ய,செய்ய கால்களில் வளைவு இல்லாமல் நேராக செய்ய முடியும்.


வஜ்ராசனம்:


இடுப்புவலி, வாதம், மூலம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய வஜ்ராசனம் மிகவும் உதவி செய்கிறது. செரிமான கோளாறுகளையும்,வாயு பிரச்சனைகளையும் சரி செய்கிறது. கல்கேனியல் ஸ்பர்ஸ் காரணமாக ஏற்படும் குதிகால் வலியையும், கீல்வாதம் காரணமாக வலியையும் குறைக்க வஜ்ராசனா பெரிதும் உதவுகிறது. மன ஒருமைப்பாடு மன அமைதி மற்றும் படபடப்பு தன்மையை போக்குகிறது. வஜ்ராசனம் தொடர்ந்து செய்யும்போது,தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஆழ்ந்த அமைதியான தூக்கம் கிடைக்கிறது.


வஜ்ராசனம் செய்வது இடுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்துள்ளது. இடுப்புப் பகுதி தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. பிரசவித்த பிறகு,பெண்களுக்கு சிறுநீரை அடக்க முடியாத நிலை ஏற்படும். இத்தகைய சிறுநீர் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.இது பிரசவ வலிகள் மற்றும் மாதவிடாய் பிடிப்புகளை எளிதாக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது பல்வேறு இதய நோய்க் கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.


வஜ்ராசனம் செரிமானத்தை அதிகரிக்க, தொப்பையை குறைக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க எண்ணினால் வஜ்ராசனம் செய்வது ஆக சிறப்பான உடல் எடை குறைப்பை தரும். இத்தகைய பலன்கள் நிறைந்த வஜ்ராசனத்தை எவ்வாறு செய்வது என்பதைக் காணலாம். முதலில் யோகா செய்வதற்காக தரையில் விரிப்பை விரித்து அதில் மண்டியிட்டு அமர்ந்து கொள்ளுங்கள். பின்பு மூச்சை சுத்தி செய்து கொள்ளுங்கள்.அதற்கு பிறகு உங்கள் பக்கவாட்டில் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள். இப்படி மேலே உயர்த்தும் சமயத்தில் மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்னர் முன்னோக்கி குனிந்து தரையை உங்கள் கைகள் மற்றும் நெத்தி பகுதி படும்படியாக கீழ்நோக்கி வரவும். இவ்வாறு வரும் சமயத்தில், மூச்சை வெளிவிடவும்.இதே நிலையில் மூன்று முறை மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து,வெளியே விடவும். பின்னர்,திரும்பவும் உட்கார்ந்த நிலைக்கு வருவதற்கு,மேல் நோக்கி வரும் சமயத்தில்,மூச்சை உள்ள இழுக்கவும். பின்னர் கைகள் இரண்டையும் தரையை நோக்கி கீழே இறங்கும் சமயத்தில் மூச்சை வெளிவிடவும்.இவ்வாறு இந்த ஆசனத்தை ஆறு ஆறு எண்ணிக்கையில் செய்து வரவும்.


இந்த வஜ்ராசனம் செய்வதற்காக மண்டியிட்டு அமர்ந்திருக்கும் சமயத்தில் இரண்டு கால்களின் பெருவிரல்கள் ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.


கர்ப்பிணி பெண்கள் இந்த வஜ்ராசனத்தை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்து வரலாம். அவர்கள் முழங்கால்களுக்கு இடையில் அதிக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வயிறுக்கு அழுத்தம் கொடுப்பது தடுக்கப்படும். இதே போல முழங்கால் வலி இருந்தாலோ அல்லது முழங்கால் அறுவை சிகிச்சை செய்தாலோ வஜ்ராசனம் செய்வதை தவிருங்கள். குடலிறக்கம் மற்றும் குடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயிற்சியாளரின் உதவியுடன் வஜ்ராசனம் செய்வது நல்லது.


இவ்வாறு யோகாசனங்கள் செய்யும்போது வெறும் வயிற்றில் செய்வது அதாவது ஆகக் குறைந்தது சாப்பிட்டு இரு மணிநேரங்கள் கழித்து செய்ய வேண்டும்.


எந்த யோகாசனம் செய்தாலும் உங்கள் கவனம் மூச்சுக்காற்றின் மேல் இருப்பது சிறப்பானதாகும்.


இதே போலவே முன்னோக்கி வளையும் இத்தகைய ஆசனத்தை செய்த பின், பின்னோக்கி வளைவதற்கான ஒரு சமன்படுத்தும் ஆசனத்தை செய்வது மிகவும் முக்கியம். இந்த ஆசனம் என்று இல்லாமல் எந்த ஒரு யோகாசனமும் அல்லது உடற்பயிற்சியும் செய்யும் தருணங்களில் முன்னோக்கி நீங்கள் ஒரு முறை குனிந்தால் பின்னோக்கி மறுமுறை வளைந்து,சக்தியை சமன் செய்வது மிகவும் முக்கியமானது.


சரியான பயிற்சியாளரைக் கண்டறிந்து யோகா பயிற்சி பெறவும். பயிற்சியாளரின் துணையில்லாமல் யோகாவை முயற்சி செய்யவேண்டாம்.