தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் என 450 பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் மூலம்  கடந்த 1972-ஆம் ஆண்டிலிந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, மண்ணென்ணெய், போன்ற அத்தியாவசிய  உணவுப்பொருள்களை நியாயவிலைக்கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.


தற்போது தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் என 450 பணியிடங்களுக்கான அறிவிப்பில் தஞ்சை மாவட்டத்தை இருப்பிடமாகக்கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதிகள் தேவை எனத் தெரிந்துகொள்வோம்.



தஞ்சை நுகர்பொருள் கழகத்தில் பணிக்கு சேர்வதற்கான தகுதிகள்:


தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பட்டியல்‌ எழுத்தர்‌ பணிக்கு சேர விரும்புவோர் பி.எஸ்சி படித்திருக்க வேண்டும். அதேபோல் உதவியாளர் பணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ‌8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற தகுதிகள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் 30 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக்கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், இப்பணிக்கு தேவைப்படும் அனைத்து சான்றிதழ்களையும் மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ எண்‌.1 சச்சிதானந்த மூப்பனார்‌ ரோடு, தஞ்சாவூர்‌-613 001 என்ற முகவரிக்கு வருகின்ற செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





குறிப்பாக 150 பட்டியல் எழுத்தர், 150 உதவுபவர், 150 காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் பட்டியல் எழுத்தர் ரூ. .2410 + ரூ.4049 (அகவிலைப்படி)உதவுபவர்‌ – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி)காவலர்‌ – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி) சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கான அனைத்துத் தகுதிகளும் இருக்கும் நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.