தஞ்சாவூரில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:


தஞ்சாவூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அகரப்பேட்டை அரசு ஆதி திராவிடர் நல (ஆதிந) மேல்நிலைப்பள்ளியில், ஒரு ஆங்கிலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடமும், கீழப்புனவாசல் அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆங்கிலம் மற்றும் ஒரு விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் மற்றும் பட்டுக்கோட்டை அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளியில் ஒரு கணிதம் (Mathematics) ஆகிய காலிப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தஞ்சாவூர் 613010 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.


என்ன தகுதி?


மேற்கண்ட காலிப்பணியிடத்தில் முதுகலை பட்டப்படிப்பு (M.A., & M.Sc.,) ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் B.Ed., முடித்திருத்தல் வேண்டும்.  தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியமாக நியமிக்கப்பட்டுள்ளது. தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள், வரும் 5.7.2024 பிற்பகல் 4.00 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 


ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித்தேர்வு (TRB) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக பணி


தஞ்சாவூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்களாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பிடும் வரை தகுதிபெற்ற பணிநாடுநர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும் நாள் முதல் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.


கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்


தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல்- 2025 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.